அதிமுக மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி.. விரைவில் வருகிறது அறிவிப்பு..!
சென்னை: அதிமுகவில் மாவட்டச் செயலாளர்களை மாற்றப் போகிறார்களாம். லிஸ்ட் ரெடியாகி விட்டதாம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அதிமுக என்றாலே அதிரடி கட்சி என்ற பெயர் இருந்தது. காரணம் அந்தக் கட்சியில் யாருக்கும் எந்தப் பதவியும் நிரந்தரமில்லை என்ற நிலை இருந்தது.
பாரபட்சமின்றி, தயவு தாட்சன்யமின்றி, யாரை வேண்டுமானாலும் பதவியிலிருந்து தூக்கி எறிவார் ஜெயலலிதா. ஆனால் அவர் மறைவுக்கு பின்னர் அதிரடி என்ற பேச்சுக்கே அதிமுகவில் இடமில்லை.
நிர்வாகிகள் மீது புகார்கள் வந்தாலும் அதனைக் கண்டும் காணாமலும் இருந்து வந்தனர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சும், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.சும்.. புகார் மீது நடவடிக்கை எடுக்கப்போய் அது கலகத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என நினைத்திருந்தனர்.
ஆனால் மக்களவைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் அடைந்த பின்னடைவை அடுத்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். க்கு சற்று தைரியம் அதிகரித்து இருக்கிறது. இப்போது கட்சியில் நடவடிக்கை எடுத்தால் யாரும் தினகரன் பக்கம் செல்லமாட்டார்கள், மேலும் திமுகவுக்கு சென்றாலும் உரிய மரியாதை கிடைக்காது என்பதால் அதிமுகவில் இருந்து வெளியேறமாட்டார்கள் எனக் கருதுகிறாராம் இ.பி.எஸ்.
மோடிக்கு எதிராக பேசும் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்ய கூடாது- சசிகலா புஷ்பா தடாலடி மனு
இதனால் பல மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி செய்யப்பட்டுவிட்டதாம். உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு ஆள், அம்பு, சேனை உள்ள நபர்களை மாவட்டம் தோறும் பார்த்து பார்த்து பட்டியல் தயார் செய்யப்பட்டதாம்.அதில் ஓ.பி.எஸ்.கை ஓங்கிவிடாமல் பார்த்துக்கொள்கிறாராம் இ.பி.எஸ்.
உதாரணத்துக்கு, திருச்சி புறநகர் மாவட்டச்செயலாளர் பதவியில் இருக்கும் ரத்தினவேல் ஆக்டிவாக செயல்படவில்லை என்பதால், அந்தப் பதவியை சிவபதிக்கு கொடுக்கலாம் என்கிறாராம் இ.பி.எஸ். ஆனால் ஓ.பி.எஸ்.சோ தனது ஆதரவாளரான பரஞ்சோதிக்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை தரலாம் என முயற்சி செய்கிறாராம்.
இதேபோல் திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மைத்துனர் கண்ணனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி தர ஓ.பி.எஸ். முடிவு செய்திருக்கிறார். இப்படி ஷேரிங் முறையில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் மாவட்டச் செயலாளர்கள் லிஸ்டை தயார் செய்துவிட்டார்கள். இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.