கூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதிகள்… அப்ப எங்களுக்கு…? தலைமையை நெருக்கும் அதிமுக தலைகள்
Recommended Video
சென்னை:லோக்சபா தேர்தலில் பாமக, பாஜகவை வளைத்து மொத்தமாக 12 தொகுதிகளை ஒதுக்கியதால்... அந்த தொகுதிகளில் விருப்ப மனு அளித்த அதிமுக முன்னணி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் வேலைகளில் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் அதிமுக மற்ற கட்சிகளை காட்டிலும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியிருக்கிறது. யாரும் எதிர்பாராத வண்ணம் பாமகவை கூட்டணியில் வளைத்து போட்டு 7 தொகுதிகளை அள்ளி கொடுத்தது.
அதன் பின்னர் அனைவரும் எதிர்பார்த்தபடி... பாஜகவையும் கூட்டணியில் சேர்த்து அந்த கட்சிக்கும் 5 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு என மும்முரமாக களத்தில் இறங்கி உள்ள அதிமுகவுக்கு சொந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளே முட்டுக்கட்டைகளாக மாறி உள்ளனர்.
கூட்டணிக்கு 12 தொகுதிகள்
விஷயம் இது தான்... கடந்த லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளில் லட்டாக வெற்றியை அள்ளிய அதிமுக அதில் 12 தொகுதிகளை(இன்னும் சொல்ல வேண்டுமானால் மூன்றில் ஒரு பங்கு) கூட்டணி கட்சிகளை அள்ளி கொடுத்துள்ளது. இது அந்த தொகுதிகளில் உள்ள தற்போதைய எம்பிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வாரிசுகள் அதிருப்தி
அது தவிர... மேற்சொன்ன அந்த 12 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள், முக்கிய தலைவர்களின் வாரிசுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு உதாரணமாக சில சம்பவங்களை அதிமுக முன்னணி நிர்வாகிகளே சுட்டிக்காட்டுகின்றனர்.
சமாதான முயற்சி
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:குறிப்பாக, பாஜகவுடன் கூட்டணி உறுதியான நிலையில் அதை ராமநாதபுரம் எம்பி அன்வர்ராஜா எதிர்த்தார். அவர் தமது பதவிகளை ராஜினாமா செய்ய முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை சமாதானப்படுத்தினார்.
தென்சென்னை பாஜகவுக்கா?
தென்சென்னை தொகுதியை குறிவைத்து அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் மீண்டும் விருப்ப மனு அளித்துள்ளார். அந்த தொகுதி அனேகமாக பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம்.
மீண்டும் வாய்ப்பு கேட்கும் நபர்கள்
எனவே. அவருக்கு வேறு தொகுதி ஒதுக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுவும் கட்சியில் சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தற்போதைய எம்.பி.க்களில் சிலர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர்.
அதிருப்தியாளர்களுடன் பேச்சு
ஒருவேளை, அவர்களது தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க நேரிட்டால், அவர்கள் அதிருப்தி அடையலாம். எனவே, அவர்களிடம் இப்போதே மூத்த அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.
சலசலப்பு, எதிர்க்கட்சிகள்
அதிமுகவில் சிறு சலசலப்பு என்றாலும், திமுக, அமமுக ஆகிய கட்சிகள் சாதகமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். எனவே, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிஒதுக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர்கள் கூறினர்.
காத்திருக்கும் சவால்
கூட்டணி வைத்ததால்... அதிமுக குறித்து பொது மக்களின் கருத்து வேறாக இருக்கிறது. கட்சிக்குள்ளும் முக்கிய தலைவர்களிடம் அதிருப்தி காணப்படுகிறது. ஆக மொத்தத்தில்... அதிமுகவுக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.