பாஜக பங்காளி ஆவதால்... திடீர் பயம்.. முதல்வரின் ஹஜ் கடிதத்தின் பின்னணி!
- கோயா
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதால் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெருமளவில் இழக்கும் அபாயத்தில் அதிமுக இருக்கிறது. இதனால் இஸ்லாமியர்களின் வாக்குகளை அதிரடியாக கவரும் வகையில் பல யோசனைகளை பாஜகவிடம் அதிமுக தரப்பு காதில் கிசுகிசுத்துள்ளதாம்.
இதில் ஒரு நடவடிக்கைதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம். அதாவது இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரைக்கு தமிழகத்திலிருந்து செல்வோரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இஸ்லாமியர்களின் மிக முக்கிய புனித பயணமாக இருப்பது ஹஜ் யாத்திரை. இந்தப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இஸ்லாமியர்கள் மத்தியில் வாழ்நாள் குறிக்கோளாக இருந்து வருகிறது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையை தமிழகத்திற்கு அதிகரித்து தருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.
கூடுதல் இடங்கள்
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 3534 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால், தமிழகத்தில் இருந்து கூடுதலாக 1,500 பேருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
தேர்தல் நெருங்குவதால்
தற்போது தேர்தல் காலம் நெருங்கி விட்டதால் இந்த கடிதத்தின் பின்னணியிலும் தேர்தல் ஆதாயம் இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அதாவது, மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவுக்கு பெரியளவில் பின்னடைவு ஏற்படும் என சர்வேயில் தெரிய வந்ததாம்.
பாஜகவால் வந்த பயம்
பாஜகவை வளர்த்து விடுவதால் இஸ்லாமியர்களின் அதிருப்தியை சம்பாதித்த இ.பி.எஸ், ஹஜ் யாத்திரை விவகாரத்தை கையில் எடுத்து இஸ்லாமியர்களை ஐஸ் வைப்பதற்காக கடிதத்தை டெல்லிக்கு தட்டிவிட்டுள்ளார் என்று சொல்கிறார்கள்.
இன்னும் திட்டம் இருக்காம்
இஸ்லாமிய மக்களின் கோபத்தை தணித்து பாஜக அதிமுக கூட்டணிக்கு வாக்குகளை பெற இன்னும் பல யோசனை வைத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் தற்போதைய சூழலில் பாஜக மீது தமிழகத்தில் நிலவி வரும் அதிருப்தியைப் பார்த்தால் எத்தனை திட்டங்கள் போட்டாலும் அது பலன் தருமா என்பது சந்தேகம்தான் என்று சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.