கட்சி அங்கீகரிக்காதவர்களிடம் கருத்துக் கேட்கக்கூடாது.. ஊடகங்களுக்கு அதிமுக தலைமை கடும் எச்சரிக்கை!
சென்னை: கட்சி அங்கீகரிக்காதவர்களிடம் கருத்துக் கேட்கக்கூடாது என ஊடகங்களுக்கு அதிமுக தலைமை கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிமுகவில் பெரும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என அக்கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த செய்திகள் ஊடகங்களில் செய்தியாக வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை கழகம் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் யாரும் ஊடகங்களில் கருத்து தெரிவிக்கக்கூடாது என அறிக்கை வாயிலாக உத்தரவிட்டது.
நேற்று கட்சியினருக்கு எச்சரிக்கை
மறு அறிவிப்பு வரும்வரை எந்த ஒரு கருத்தையும் கூற கூடாது என்றும் அறிவுறுத்தியது. அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களிடம் பேசினால் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் கட்சி தலைமை எச்சரித்தது.
இன்று ஊடகங்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் ஊடகங்களுக்கு அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை விடுத்துள்ள அறிக்கையில் கட்சி அங்கீகரிக்காதவர்களிடம் ஊடகங்கள் கருத்துக் கேட்கக்கூடாது என தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
ஆட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம்
கட்சி தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தை கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக எச்சரித்துள்ளது. சட்டரீதியான நடவடிக்கை எடுக்க எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம் என்றும் அதிமுகவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி பொறுப்பேற்க முடியாது
அதிமுக பெயரில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் கொடுக்கும் பேட்டிகள், செய்திகளுக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்றும் அதிமுக தலைமைக் கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கழகத்தின் பிரதிநிதிகள் என்றோ அல்லத கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலோ பிரதிபலிக்கும்படி யாரையும் தங்களின் ஊடகங்களின் வழியாக கருத்துக்களை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக என அடையாளப்படுத்த வேண்டாம்
மேலும் வேறு யாரையும் அழைத்து அவர்களை அனைத்து இந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் என்று அடையாள படுத்த வேண்டாம் என்றும் அதிமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் கூறுவதை அதிமுக கருத்து என தெரிவிக்க எதிர்ப்பு தெரிவித்து தலைமைக் கழகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.