கொரோனா காலத்திலும் குறையாத உற்சாகம்... குத்தாட்டம்-புலியாட்டம்-செண்டைமேளம் என தூள் கிளப்பிய அதிமுக!
சென்னை: கொரோனா பேரிடர் காலத்திலும் அதிமுக செயற்குழு கூட்டம் உற்சாகத்திற்கு குறைவின்றி நடத்தப்பட்டுள்ளது.
Recommended Video
குத்தாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளங்கள் என அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை தூள் பறந்தது.
இதுமட்டுமல்லாமல் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.சை வரவேற்க வந்த அவரது ஆதரவாளர்களுக்கு மதிய உணவாக பிரியாணியும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரு மொழிகொள்கைதான்.. நீட் தேர்வு வேண்டாம்.. மத்திய அரசுக்கு எதிராக அதிமுக தீர்மானம்
கொரோனா பேரிடர்
கொரோனா பேரிடர் காலமாக இருந்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாத அதிமுக தொண்டர்கள் செயற்குழு கூட்டம் நடைபெறும் கட்சியின் தலைமை அலுவலகம் முன் காலை 8 மணி முதலே குவியத் தொடங்கினர். பல மாதங்களுக்கு பிறகு கட்சி அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் பார்த்து பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர். செயற்குழு தொடங்குவதற்கான நேரம் நெருங்க நெருங்க அதிமுக முன்னணி தலைவர்கள் தலைமை அலுவலகத்திற்கு வரத் தொடங்கினார்கள்.
புலியாட்டம்
அவர்களை பார்த்த உற்சாகத்தில் குத்தாட்டம் போடத் தொடங்கினார்கள் அங்கு கூடியிருந்த மகளிரணி தொண்டர்கள். மேலும், புலியாட்டம் செண்டைமேளங்கள் என அசத்தலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் லாயிட்ஸ் சாலை வழியாக சென்றவர்கள் ஓரிரு நிமிடங்கள் நின்று அதனை வேடிக்கைப் பார்த்த பின்னரே சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா, விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. ரவி ஆகியோர் செய்திருந்தனர்.
மதிய உணவு
இதனிடையே ஜெயலலிதா காலத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற்றால் அன்றைய தினம் மதிய விருந்து கொடுப்பது அவரது வழக்கம். சைவம், அசைவம் என அதிமுக பொதுக்குழுவின் போது தடபுடல் விருந்து வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்றும் அதற்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமைக்கழகம் செய்திருந்தது. மேலும், காலை முதலே கட்சி அலுவலகம் முன் காத்திருக்கும் தொண்டர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்படுகிறது.
எதிர்பாராத வகையில்
அதிமுக செயற்குழுவில் பங்கேற்க சுமார் 300 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன் குவிந்துவிட்டனர். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் கட்சி உயிர்ப்புடன் இயங்குவதை இதன் மூலம் வெளிக்காட்டியுள்ளனர் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.