திமிங்கலங்களை போல காத்துக்கிடக்கிறாங்க.. அதிமுகவினர் கப்சிப்ன்னு இருக்கனும்.. ஜெயக்குமார் ஆர்டர்!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோள்படி அதிமுகவினர் கப்சிப் என்று இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக கட்சிக்குள் ஏற்பட்டிற்கும் உட்கட்சி பூசல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் அதிமுக எம்எல்ஏவான ராஜன் செல்லப்பா கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும் என்றும், இரண்டு தலைமைகள் இருப்பதால் யாரிடம் அதிகாரம் உள்ளது என்று தெரியவில்லை என்றார்.
மேலும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஓபி ரவீந்திரநாத்துடன் ஏன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த செல்லவில்லை என்று கேட்டு கொளுத்திப்போட்டார். மேலும் ரவீந்திரநாத்துடன் செல்லவிடாமல் எம்எல்ஏக்களை தடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் ராஜன் செல்லப்பா.
"பாஜக ஒழிக".. தமிழிசையின் மகன் எழுப்பிய கோஷம்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
கருத்துவேறுபாடு உண்மை
அவரது இந்த பேச்சு குறித்து அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் சில நிர்வாகிகள் கட்சிக்குள் பிளவு இருப்பது உண்மைதான், ஓபிஎஸும் ஈபிஎஸும் முழுமையாக இணையவில்லை அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதும் உண்மை என்றனர்.
கொழுந்துவிட்டு எரியும் திரி
ராஜன் செல்லப்பா கொளுத்திப்போட்ட திரி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் கட்சி விவகாரம் குறித்து அதிமுகவினர் பேசக்கூடாது என ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து இன்று மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார் ராஜன் செல்லப்பா.
காலம்தான் முடிவு செய்யும்
இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுகவுக்கான ஒற்றைத் தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
கட்சியில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.
அம்பலத்தில் விவாதிக்கக்கூடாது
கட்சியின் ஒற்றை தலைமையை அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்ய முடியாது. உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கலாம். அறையில் விவாதிக்க வேண்டியதை அம்பலத்தில் விவாதிக்க கூடாது.
பிளவு என்பதே சரியில்லை
அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும், தேர்தல் நடந்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. உட்கட்சி விவகாரத்தை வெளியில் பேசுவது சரியல்ல. அ.தி.மு.க.வில் பிளவு என்பதே இல்லை.
கப்சிப்ன்னு இருக்கனும்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வேண்டுகோளின்படி அ.தி.மு.க.வினர் பொதுவெளியில் எவ்வித கருத்துகளும் தெரிவிக்காமல் கப்சிப் என்று இருக்க வேண்டும். திமிங்கலங்களை போல் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை கலைக்க நினைக்கிறார்கள்.
அமைச்சரயில் மாற்றம்?
2021லும் நாங்கள் தான் ஆட்சியைக் கைப்பற்றுவோம். ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவா்கள் நினைப்பது நடக்காது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்காது.
பல்லிளிக்க மாட்டோம்
அறிஞர் அண்ணா பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு, கொள்கை என்பது மானத்தை காக்கும் இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி என்றார். எங்களுக்கு துண்டைவிட வேட்டிதான் முக்கியம். எந்த நிலையிலும் பதவிக்காக பல்லிளிக்க மாட்டோம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.