"அம்மா" ஒதுக்கி ஓரம் கட்டிய 'அக்ரி'.. எப்படி ஓட்டு போடுவது.. குழப்பத்தில் திருவண்ணாமலை அதிமுக!
சென்னை: இப்படி வேட்பாளரை அறிவித்துவிட்டதால் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறார்களாம் திருவண்ணாமலை அதிமுக தொண்டர்கள்!
திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இன்னமும் இவர் மீது வடுக்கள் மாறாமல் உள்ளது.
மேலும் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நேரடியாக தூக்கி அடிக்கப்பட்டவர் என்ற சம்பவமும் மக்கள் மனதில் நினைவில் உள்ளது.
உப்புச் சப்பில்லாத 4 தொகுதிகள், வேட்பாளர்கள்.. உதயசூரியன் உதயமாகி... தேமுதிக அஸ்தமனமாகுமோ?
ஜெயலலிதா
ஜெயிலுக்கு போய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் அக்ரி கிருஷ்ணமுர்த்தியை ஜெயலலிதா கட்சியில் கடைசிவரை சேர்க்கவே இல்லை. ஆனால், அவர் மறைவுக்கு பிறகு உள்ள அதிமுக தலைமையோ, இவரது இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டதுடன், தொடர்ந்து நெருக்கம் காட்டியே வருகிறது.
குழம்பும் மக்கள்
மகன் கல்யாணத்துக்கு அக்ரி வீட்டுக்கு முதல்வர் உட்பட வந்திருந்த அமைச்சர் பெருமக்களுக்கு ஸ்பெஷலாக உணவு தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த நெருக்கம் இப்போது சீட் தரும்வரை வளர்ந்து விட்டது. இதனால் தொகுதி மக்கள் என்ன செய்வதென்று புரியாமல் உள்ளனர். அம்மா தூக்கி எறிந்த நபருக்கு எப்படி வாக்களிப்பது, வெற்றி பெற வைப்பது என்று குழம்பி உள்ளனர்.
வனரோஜா
இவரை எதிர்த்து திமுக சார்பாக சி.என். அண்ணாதுரை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரது பெயர் மற்றும் இன்ஷியல் எல்லோரையுமே ஈர்த்த ஒன்று. இளைஞர் அணி உறுப்பினர் முதல் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வரை பதவி வகித்துள்ளதால் அந்த பகுதியில் செல்வாக்கு பெற்றவர். போன 2014ஆம் ஆண்டு தேர்தலில், அதிமுகவின் வனரோஜாவை எதிர்த்து போட்டியிட்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
சாதகமாகுமா?
ஆனால் தொகுதி மக்களுக்கு அக்ரி மீதான ஆழ்மனசு எண்ணம், அதிமுக-பாஜக கூட்டணியின் தாக்கம், மத்திய-மாநில அரசுகள் மீது தொகுதி மக்களின் அதிருப்தி, இதெல்லாம் போக சிறுபான்மை மக்களின் ஓட்டுக்கள் என அனைத்துமே இன்றைய நிலைமையில் அண்ணாதுரைக்கு சாதகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
செல்வாக்கு
இருந்தாலும் தொகுதியில் பிரச்சாரம் என்று வரும்போது, ஆளும் தரப்பின் பண பலமும், செல்வாக்கும் இந்த தொகுதியில் எந்த அளவுக்கு களமிறக்கப்படும் என்பதை வைத்துதான் இறுதி முடிவு தெரியும் என சொல்லப்படுகிறது.