சிறை விதிகளை சசிகலா மீறவில்லை.. ரூபா மீது வழக்கு தொடருவோம்- வழக்கறிஞர் அசோகன்
சென்னை: சிறை விதிகளை சசிகலா மீறவில்லை என்றும் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் புகார் கூறிய சிறைத் துறை முன்னாள் அதிகாரி ரூபா மீது அவதூறு வழக்கு தொடருவோம் என்றும் வழக்கறிஞர் அசோகன் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக சிறைத் துறை முன்னாள் அதிகாரி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
மேலும் இந்த சொகுசு வசதிகளுக்காக அவர் சிறை துறை ஏடிஜிபி சத்யநாராயணாவுக்கு ரூ .2 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார் என்றும் ரூபா புகார் அளித்தார்.
விசாரணையில் உண்மை
இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை கமிஷனை மாநில அரசு அமைத்துள்ளது. அந்த ஆணையத்தின் விசாரணையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் தனி சமையலர் நியமனம் செய்யப்பட்டிருந்ததாகவும் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது.
சாதாரண உடை
இதை சசிகலாவின் வழக்கறிஞர் மறுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் சாதாரண சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சாதாரண தண்டனை பெற்று வருபவர் சொந்த உடைகளை அணிய விதி அனுமதிக்கிறது.
மானநஷ்ட வழக்கு
காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரோ தூண்டுதலின் பேரில் பொய் குற்றம்சாட்டிய பெங்களூர் முன்னாள் சிறை அதிகாரி ரூபா மீது வழக்கு தொடருவோம். ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இது தொடர்பாக பிரச்சினை எழுப்பப்பட்டது. தற்போது பொதுத் தேர்தல் வரும் நிலையில் இது போன்ற பிரச்சினை மீண்டும் எழுப்பப்படுகிறது.
காரிடார்
வீடியோவில் சசிகலா கையில் கொண்டு செல்வது நான் கொடுத்தனுப்பிய கோப்புகள்தான். வீடியோவில் சித்தரித்தது போல் நீங்கள் பார்த்த பகுதி வெளிப்பகுதி அல்ல. பார்வையாளர்களை சந்திக்க செல்லும் காரிடார் பகுதியாகும் என்றார் அசோகன்.