மறக்க முடியாத சாந்தா.. கடைசி வரை விடாமல் போராடி ஜெயித்து மக்களின் மனங்களில் வாழும் உயர்ந்த பெண்மணி
சென்னை: அடையாறு புற்று நோய் மருத்துவமனை தலைவரான சாந்தா(93), உலகப் புகழ் பெற்ற மருத்துவர் ஆவார். தன்னலமற்ற மருத்துவ சேவை மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு மறுவாழ்வு அளித்தவர். இதற்காக அவருக்கு மகசேசே, பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பல லட்சம் மக்களின் அன்பை பெற்றவர் ஆவார்.
Recommended Video
அடையாறு புற்று நோய் மருத்துவமனை தலைவரான சாந்தா(93) உடல் நலக்குறைவால் இன்று காலாமானார். டாக்டர் வி.சாந்தா சென்னையில் 1927ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி பிறந்தவர் ஆவார். இவரது குடும்பம் இந்தியாவில் புகழ் பெற்ற அறிவியல் குடும்பம் ஆகும். சாந்தா 1949 இல் (M.B.B.S.) பட்டம் பெற்றார், 1952 ஆம் ஆண்டில் D.G.O. பட்டமும். அதன்பின்னர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் எம்.டி பட்டமும் பெற்றார்.
1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வளர்ந்து வரும் புற்றுநோய் நிறுவனத்தில் சாந்தா சேர்ந்தார், அதன்பின்னர் மெட்ராஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணரானார். பின்னர் படிப்படியாக சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா (93) காலமானார்
அர்பணிப்பு
சாந்தா தனது 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது முழு மருத்துவ வாழ்க்கையும் புற்றுநோய் நோயாளிகளை கவனிக்கவே அர்பணித்தார்.புற்று நோயைப் பற்றிய ஆய்வு, அதன் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து நீண்ட ஆய்வுகள் மேற்கொண்டார். அவரது ஆய்வுகள் புற்றுநோயியல் அறிவியலின் பல்வேறு அம்சங்களில் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
முக்கியமானது
12 படுக்கைகள் கொண்ட சிறு மருத்துவமனையாக ஆரம்பிக்கப்பட்ட அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் என்று அழைக்கப்படும் சென்னை புற்றுநோய் நிறுவனத்தை தனது குரு டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முக்கியமான புற்றுநோய் சிகிச்சை மையமாக வளர சாந்தாவின் அர்பணிப்பு மிக முக்கியமானது ஆகும்.
ஐசிஎம்ஆர் உறுப்பினர்
சாந்தா மார்ச் 2005 வரை புற்றுநோய் தொடர்பான உலக சுகாதார மையத்தின் ஆலோசனைக் குழுவில் இருந்தார். புற்றுநோய்க்கான மாநில ஆலோசனைக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தார். மருத்துவர் சாந்தா, லிம்பாய்டு நியோபிளாசியாஸ் பற்றிய INDO-US கூட்டுக் குழுவின் தலைவராகவும், பல ஐ.சி.எம்.ஆர் குழுக்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அண்ணா பல்கலை உறுப்பினர்
ஐ.சி.எம்.ஆர் பணிக்குழுவின் உறுப்பினராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்திய புற்றுநோயியல் சங்கத்தின் (88-90) தலைவராகவும், புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான ஆசிய மற்றும் பசிபிக் கூட்டமைப்பு அமைப்புகளின் தலைவராகவும் (97-99), 15 வது ஆசிய மற்றும் பசிபிக் புற்றுநோய் மாநாட்டின் (1999) தலைவராகவும் சாந்தா இருந்தார். பல அறிவியல் சர்வதேச ஒத்துழைப்பு திட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
மகசேசே விருது
இவர் தன்னலமற்ற மருத்துவ சேவை மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வு தந்தார். இதற்காக மகசேசே, பத்ம விபூஷண் உள்ளிட்ட உயர்ந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளை அர்பணித்து காலம் சென்றுள்ளார் மருத்துவர் சாந்தா.
அடையாறுக்கு வரும்
புற்றுநோய் என்றாலே மரணம் வரும் என்றும் கொடூர நோய் என்றும் மக்கள் அச்சப்பட்ட நிலையில், எல்லா புற்றுநோய்க்கும் தீர்வு உண்டு என்று மக்களிடம் நம்பிக்கை அளித்தவர் சாந்தா. உலகில் எங்கேனும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அது உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அறிமுகம் செய்ய வைப்பதில் அரும்பாடுபட்டார். தனது கடைசி காலம் வரை மக்களுக்காகவே வாழ்ந்த மக்களின் மருத்துவர் தான் சாந்தா. இவரது நினைவுகள் என்றும் மக்களின் மனதில் நிற்கும்.