களமிறங்கிய அதிரடி 'மைனிங் படை'.. தங்கத்திற்காக நடக்கும் சைலண்ட் போர்.. ஹாலிவுட் பட பாணியில் கொடூரம்!
பமாகோ: ஆப்பிரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய தங்க உற்பத்தி நாடான மாலியில், சட்டவிரோத சுரங்கத் தொழிலை வேரோடு அறுக்க 'சிறப்பு அதிரடிப் படை' ஒன்றை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. அங்கே தங்க கடத்தல் தீவிரமாக நடப்பதால் நிறைய மாபியா உருவாக்கி உள்ளது. இதை தடுக்க புதிய படை களமிறக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாஃபியாக்களின் பிடியில் சிக்கியுள்ள தங்கச் சுரங்கங்களை மீட்கவும், பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

என்ன நடக்கிறது மாலியில்? - தங்க கடத்தலில் கொடூரம்
கடந்த மார்ச் 12, 2026 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 'பிரிகேட் ஸ்பெஷல் டெஸ் மைன்ஸ்' (Brigade spéciale des mines) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறப்புப் பிரிவுக்கு, நீதித்துறை அதிகாரங்கள் (Judicial Powers) வழங்கப்பட்டுள்ளன. அதாவது, இவர்கள் நேரடியாகச் சுரங்கங்களில் சோதனை நடத்தவும், சட்டவிரோத உபகரணங்களைப் பறிமுதல் செய்யவும், குற்றவாளிகள் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
2020 முதல் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும், தங்கம் கடத்தல் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி தங்கம் பிரித்தெடுப்பது போன்ற சட்டவிரோதச் செயல்கள் தொடர்வது அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம்தான் ஆப்ரிக்க பொருளாதாரத்தின் முதுகெலும்பு
மாலியின் ஏற்றுமதி வருமானத்தில் சிம்ம சொப்பனமாக விளங்குவது தங்கம்தான். இங்கிருந்து சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்குத் தங்கம் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இருப்பினும், கணக்கில் வராத சுரங்கத் தொழிலால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய் பெருமளவில் கசிகிறது. அதுமட்டுமின்றி, முறைசாரா சுரங்கங்களால் விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வந்தனர். இதைக் கட்டுப்படுத்தவே இந்த 'இரும்புக்கரம்' நடவடிக்கை என்கிறார்கள் அதிகாரிகள்.
தங்க கடத்தல் - முன்னணி நிறுவனங்களுக்குக் கெடுபிடி?
மாலியில் பி2கோல்ட் (B2Gold) நிறுவனத்தின் 'பெகோலா' சுரங்கம் மற்றும் போரிக் கோல்ட் (Barrick Gold) நிறுவனத்தின் 'லூலோ-குன்கோட்டோ' வளாகம் எனப் பிரம்மாண்டமான தங்கச் சுரங்கங்கள் உள்ளன. ஆண்டுக்கு 60 டன்னுக்கும் அதிகமான தங்கம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் தேவை விண்ணை முட்டுகிறது. 2025-ல் மட்டும் உலகளாவிய தங்க நுகர்வு 5,000 டன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. விலை உச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில், தனது இயற்கை வளத்தைச் சரியாக முறைப்படுத்த மாலி அரசு முயல்கிறது.
"தங்கம் ஒரு நாட்டின் சொத்து; அது ஒரு சில கும்பல்களின் லாபத்திற்காக சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது" என்பதே மாலி அரசின் தற்போதைய நிலைப்பாடு. ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க நாடுகள் தங்களது கொள்கைகளை மாற்றி வரும் வேளையில், மாலியின் இந்த அதிரடி ஆட்டம் மற்ற நாடுகளையும் யோசிக்க வைத்துள்ளது.
அடுத்து என்ன?
இந்தச் சிறப்புப் படையின் வருகையால் முறையான உரிமம் பெற்ற சிறு குறு சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா அல்லது அவர்கள் முறைப்படுத்தப்படுவார்களா என்பதுதான் இப்போது எழுந்துள்ள முக்கிய கேள்வி.












Click it and Unblock the Notifications