கொந்தளித்த தமிழர்கள்.. “பேக்” அடித்த பிரசார் பாரதி! காரைக்கால் வானொலியில் இந்தி நிகழ்ச்சிகள் ரத்து
சென்னை: காரைக்கால் வானொலி நிலைய எஃப்.எம்-இல் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டு இந்தி நிகழ்ச்சிகளின் நேரம் அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இந்தி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் நாடு முழுவதும் ஆல் இந்தியா ரேடியோ வானொலி சேவையை வழங்கி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் இந்த வானொலி சேவைகள் அந்தந்த மாநில மொழிகளில் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சென்னை, தருமபுரி, நாகர்கோவில், காரைக்கால் ஆகிய இடங்களில் வானொலி சேவை செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் பல்வேறு மாநில வானொலிகளில் இந்தி திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
அங்கிட்டு புறநானூறு, தொல்காப்பியம்; இங்கிட்டு சமஸ்கிருதத்தின் ஞானம்:பிரதமர் மோடியின் வானொலி உரை
காரைக்கால் FM
இந்த நிலையில் காரைக்கால் வானொலி நிலையத்தின் எஃப்.எம்.-இல் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. காரைக்கால் வானொலியில் தினமும் காலை 5.-52 முதல் இரவு 11.20 மணி வரை 17.28 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்தன.
இந்தி திணிப்பு
இந்த நிலையில் முன்னறிவிப்பின்றி, நேற்று முதல் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டது. காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையிலும், இரவில் 9 மணி முதல் 10 மணி வரையிலும் மும்பை விவிதபாரதி நிலையத்தின் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
4 மணி நேரம் இந்தி
இதன் மூலம் காரைக்கால் வானொலியில் தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பப்பட்டது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பை கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வானொலி நிலைய அதிகாரிகள் விளக்கமளித்தனர். ஆனால் மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் வலுத்தன.
பின்வாங்கிய பிரசார் பாரதி
காரைக்கால் வானொலில் இந்தி நிகழ்ச்சியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் எச்சரித்தார். இந்த நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக காரைக்கால் வானொலி பண்பலை சேவையில் 4 மணி நேரம் ஒலிபரப்பப்படும் இந்தி நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக பிரசார் பாரதி அறிவித்து உள்ளது.