டாஸ்மாக் விவகாரம்- ரஜினியின் மவுனத்தை கலைத்தது கமல்ஹாசனின் மநீமவின் அடுத்தடுத்த பல்க் ஸ்கோர்
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பு விவகாரத்தை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி உக்கிரமாக கையாண்டு வரும் நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தும் களத்தில் குதித்திருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தின் அதிவேக செயல்பாடுகள்தான் ரஜினிகாந்தின் மவுனத்தையும் கலைத்தது என்பது மிகையல்ல என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
Recommended Video
லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பிற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
திமுக கூட்டணிக் கட்சிகள் தங்களது வீடுகளில் இருந்தபடியே போராட்டங்களை நடத்தின. இன்னொரு பக்கம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டின.
தாய்மார்களின் மனவேதனையை எதிரொலித்த ரஜினி... எச்சரிக்கையும், அறிவுரையும் கலந்த ட்வீட்
டாஸ்மாக் கடைகள் மூடல்
இதனால் தமிழகத்தில் 2 நாட்களாக திறக்கப்பட்டிருந்த மதுபான கடைகள் இழுத்து மூடப்பட்டன. தற்போது இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் தங்களையும் இந்த மேல்முறையீட்டு சேர்க்க கோரும் கேவியட் மனுவை மநீம மற்றும் பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
மநீம உக்கிர எதிர்ப்பு
கடந்த சில நாட்களாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்புக்கு எதிராக படு உக்கிரமாகவும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். முதலில் கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு. என விமர்சித்தார்.
கமல்ஹாசன் தொடர் விமர்சனம்
இதனைத் தொடர்ந்து தமிழக மக்களுக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டார். அதிலும் டாஸ்மாக் திறப்புக்கு எதிராக ஆவேசத்தைக் காட்டியிருந்தார் கமல்ஹாசன். பின்னர் மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமாதமிழகம் என்றும் கேள்வி எழுப்பினார் கமல்ஹாசன்.
மேல்முறையிடும் கேவியட் மனுவும்
மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்ற கமல்ஹாசன், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம் என ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். மதுபான கடைகள் திறப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
கேவியட் குறித்து கமல்
இதனை விமர்சித்த கமல்ஹாசன், குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும். என்று ஆவேசப்பட்டார். இப்படி கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்யமும் டாஸ்மாக் விவகாரத்தில் மிக தீவிரமாக இயங்கி வந்தனர். இது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
மவுனம் கலைத்த ரஜினிகாந்த்
இதனால் வேறுவழியே இல்லாமல் நடிகர் ரஜினிகாந்தும் டாஸ்மாக் விவகாரத்தில் களம் இறங்கியுள்ளார். அதனால்தான் இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என்று தமிழக அரசை எச்சரித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.