காமராஜர் ஆட்சிக்கு பின் தமிழகம் வளர்ந்தது கருணாநிதி ஆட்சி காலத்தில்தான்.. நாராயணசாமி உருக்கம்
சென்னை: கருணாநிதி ஒரு தீர்க்க தரிசி. காமராஜர் காலத்திற்கு பிறகு தமிழகம் வளர்ச்சி பெற்றது கருணாநிதி ஆட்சி காலத்தில்தான் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இன்று மறைந்த முதல்வர் கருணாநிதியின் 2வது ஆண்டு நினைவு தினமாகும். இதையொட்டி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்திரன் ஏற்பாடு செய்திருந்த, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோகான்பரன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. அப்போது நாராயணசாமி பேசியதாவது:
கலைஞர் பெயரில் பல திட்டங்களை புதுச்சேரியில் கொண்டுவந்துள்ளேன். கலைஞர் பெயரை புதுச்சேரி சாலைக்கு சூட்டியுள்ளேன். கருணாநிதி ஒரு தீர்க்க தரிசி. காமராஜர் காலத்திற்கு பிறகு தமிழகம் வளர்ச்சி பெற்றது கருணாநிதி ஆட்சி காலத்தில்தான்.
கருணாநிதியோடு பழகியவன் என்ற முறையில் அவர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. நான் மத்திய அமைச்சராக இருந்தபோதும், புதுவை முதல்வராக இருந்த போதும் அவரை சந்தித்து ஆசி பெற்று உள்ளேன்.
கருணாநிதி பிறந்த நாளின் போது ஒவ்வொரு ஆண்டும் அறிவாலயம் சென்று அவரிடம் ஆசி பெற்று வந்துள்ளேன். அவருடைய நற்பண்புகளை அவரிடம் பேசும்போது காணமுடிந்தது. அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வருவதற்காக உங்கள் பணி இருக்க வேண்டுமென்று என்னிடம் வலியுறுத்திக் கூறுவார். சென்னையில் இருந்தபடி அகில இந்திய அரசியலை அலசிப் பார்த்த தலைவர் கலைஞர்.
அகில இந்திய அளவில் அரசியல் எப்படி இருக்கிறது என்பதை அவரிடம் பேசும் போதே புரிந்து கொள்ள முடியும். சந்திக்கும்போதெல்லாம் சோனியாகாந்தி பற்றி விசாரிப்பார். மத்திய அமைச்சரவையில் எந்ததெந்த திட்டங்களை நிறைவேற்றுகிறீர்கள் என்று கேட்டு அறிந்து கொள்வார்.
தலைவர்கள் எல்லாம் அவரை சந்திக்க காத்திருந்த போதும் என்னை அழைத்து 20 நிமிட காலமாவது உரையாடுவார். அவரது அறிவுரைகளை எல்லாம் கேட்டிருக்கிறேன். அவரது அறிவுரையின்படி நான் மத்திய அமைச்சராக இருக்கும்போது பணியாற்றி உள்ளேன். அவர், ஆசான், நான் மாணவன் என்ற உணர்வுதான் அவருடன் பேசும்போது ஏற்படும்.
யார் சந்தித்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்கக்கூடிய தலைவர், ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை கலைஞர் வாழ்க்கையை பார்த்து தெரிந்து கொள்ளலாம். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது சட்டசபையில் மக்களுக்கான பிரச்சினைகளை எழுப்ப தவறியது கிடையாது. முதல்வராக இருந்தபோது மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற தவறியது இல்லை. எனவே தான் மக்கள் மனதில் இன்னும் நீக்கமற நிறைந்துள்ளார்.
அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது மருத்துவமனை மற்றும் வீட்டுக்கு சென்று உள்ளேன். கடைசியாக நான் சென்று பார்த்த போது கலைஞரால் பேச முடியவில்லை. நாற்காலியில் அமர்ந்திருந்தார். அருகே அவரது மகள் செல்வி இருந்தார். என்னை பார்த்து புன்முறுவல் பூத்தார். கலைஞர் ஏதோ பேச நினைத்தார். ஆனால் அவரால் பேச முடியவில்லை. நீங்கள் பேசவேண்டாம் உடல்நலம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன். 10 நிமிடம் இருந்து விட்டு கிளம்ப முற்பட்டபோது கையசைத்து அமரச் சொன்னார்.
பிறகு சுமார் அரை மணி நேரம் அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்க்காத ஒரு தலைவர். அவரது எண்ணம் எல்லாம் ஏழைகளுக்காக இருக்கும். மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்திய தலைவர். செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு கோவைக்கு எனக்கு அழைப்பு விடுத்தார்.
அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். இன்று காலை கூட புதுச்சேரியில் திமுக சார்பில் கலைஞருக்கு நினைவஞ்சலி செலுத்தும் விழாவில் நாங்கள் பங்கேற்றோம். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.