ஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு
சென்னை: கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே வைரஸ் பரவல் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மாநிலத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த மே 11ஆம் தேதி சென்னையில் 7466 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 12ஆம் தேதி அதிகபட்சமாக 7564 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு சென்னையில் தொடர்ந்து குறைந்தே வருகிறது. தலைநகரில் நேற்று 6640 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், இன்று வைரஸ் பரவல் மேலும் குறைந்துள்ளது. இன்று சென்னையில் 6,247 (393 குறைவு) பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் சென்னையில் கொரோனா பரவல் விகிதம் 0.7% குறைந்துள்ளது. அதேபோல கொரோனா பாசிடிவ் விகிதம் 20% ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பரிசோதனையில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது என்பதை பாசிடிவ் விகிதம் எனப்படும்.