மே 23-ந்தேதிக்கு பிறகு மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம்... மு.க.ஸ்டாலின் அறிக்கை
சென்னை: மே 23-ந்தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் 'சவுகிதார்' (பாதுகாவலர்) ஆகிவிடக்கூடாது என்பதை தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அது குறித்த சட்டரீதியான அணுகுமுறைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் சூழ்ச்சியான வகையில் என்னதான் தந்திரங்கள் செய்தாலும், மக்கள் மன்றத்தில் அது ஒருபோதும் எடுபடவில்லை, ஏமாற்றமே மிஞ்சும் என்பதை ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வரும் தேர்தல் வாக்குப்பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
பாசிச பா.ஜ.க.
பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு சற்றும் சளைக்காத அடிமை அ.தி.மு.க. ஆட்சியும் ஏற்கனவே தனது மெஜாரிட்டியை இழந்து விட்ட நிலையில், மத்தியில் பா.ஜ.க. அரசை மக்கள் வீழ்த்தும்போது மாநிலத்தில் தனது ஆட்சியும் சேர்ந்தே தானாகவே வீழும் என்பதை அறிந்திருக்கிறது.
காலிக் குடங்கள்
கோடைக்காலத்தில் கொளுத்துகின்றது அக்கினி வெயில். வறண்டு கிடக்கின்றன ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள். மக்களின் தண்ணீர் தாகத்தைக்கூட தீர்க்கும் யோக்கியதை இன்றி ஒரு ஆட்சி பெயருக்கு நடந்து கொண்டிருக்கிறது. காலிக் குடங்களும், கண்ணீருமாக நெடுந்தூரம் கவலையையும் சுமந்து நடக்கிறார்கள் தாய்மார்கள்.
டெண்டர் கொள்ளை
அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் உயிரில்லாமல் செயலிழந்து கிடக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமலேயே ஒட்டு மொத்தமாக டெண்டர் கொள்ளை அடிப்பது ஒன்றிலேயே குறியாக இருக்கிறது கமிஷன்- கரப்ஷன் கலெக்சனைக் கொள்கையாகக் கொண்ட கொள்ளைக்கூட்ட அரசு.
தவறவிட வேண்டாம்
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மற்ற தொகுதிகளில் உள்ள உடன்பிறப்புகளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி 4 தொகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்புப் பரப்புரையை மேற்கொள்ள முடியும். ஜனநாயக முறையில் உதய சூரியனுக்கு வாக்கு சேகரிப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட வேண்டாம். நம்மை வெற்றி பெறச் செய்ய மக்கள் விரும்பி ஆயத்தமாக இருக்கிறார்கள். மக்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதில் நாம் முனைப்பாகச் செயலாற்ற வேண்டும்.
நல்லரசு அமைப்போம்
ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப் போகும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கான முத்திரையைப் பதிப்போம். மே 23-ந்தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம்.