வெங்காயத்தை தொடர்ந்து முருங்கைக்காயும் ரொம்ப காஸ்ட்லி.. மக்கள் அதிர்ச்சி
சென்னை: வெங்காயம் விலைதான் உச்சத்தில் இருக்கிறது என்று பார்த்தால் முருங்கைக்காய் விலையும் மிக உச்சத்தில் விற்கிறது. இதனால் வெங்காயம் , முருங்கைக்காய் இல்லாமல் சாம்பார் வைத்து சாப்பிடுவது என்ற கடின நிலைக்கு இன்று மக்கள் தள்ளப்பட்டனர்.
தென்மேற்கு பருவமழை அதீதமாக பெய்த காரணத்தால் கர்நாடாகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டது.
பயிர்கள் தண்ணீரில் மூழ்கிஅழுகிப்போயின. இதனால் மிகக்குறைவாகவே வெங்காய வரத்து கடந்த இரண்டு மாதங்களாக உள்ளது.
செப்டம்பரில்
செப்டம்பரிலேயே வெங்காய விலை வடமாநிலங்களில் கூடிவிட்ட நிலையில் இருக்கும் ஸ்டாக் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததால் வெங்காய விலை அதிரடியாக குறைந்தது. தமிழகத்தில் சின்ன வெங்காயம் தான் அதிகமாக விளையும். ஆனால் வெங்காய விலை அதிகமான உடனேயே சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்தது.
இப்போது 170ரூபாய்
நவம்பர் முதல் வாரத்தில் 25 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் இப்போது 150 முதல் 170 ரூபாய் வரை விற்கிறது. பெரிய வெங்காயம் முதல் தரமான வெங்காயம் என்றால் 150க்கமேல் விற்கிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தர வெங்காயங்களே100 முதல் 150 வரை விற்கப்படுகிறது.
முகூர்த்த நாள்
இதனால் மக்கள் வேதனையில் உள்ள நிலையில், தற்போது அவர்களையும் இன்னும் வேதனைக்குள்ளாக்கும் வகையில் முருங்கைக்காய் விலையும் விண்ணை தொட்டுள்ளது. இன்று முகூர்த்த நாள் என்பதால் ஒரு கிலோ முருங்கை ரூ.650 முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
350 ரூபாய் வரை
பொதுவாக கடந்த சில நாட்களாக மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முருங்கை வரத்து குறைந்த நிலையில் முருங்கை விலை ஒரு கிலோ 300 ரூபாய் முதுல் 350 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதேபோல் சென்னையிலும் 300 ரூபாய் முதுல் 350 ரூபாய் வரை விற்பனையாகிறது.
வேதனை
வெங்காயத்தை தொடர்ந்து முருங்கைக்காய் விலையும் உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சாம்பார் வைத்து சாப்பிட ஆசைப்படும் மக்கள் வெங்காயம் இல்லாமல் முருங்கைக்காயும் இல்லாமல் எப்படி சாம்பார் வைப்பது என்று வேதனையில் உள்ளனர். இதற்கிடைய மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகமாகவே விற்கிறது.