பாமாயில் மட்டும் கிடையாது.. மலேசியாவுக்கு எதிராக வர்த்தக யுத்தம்.. இந்தியா அடுத்த மூவ்
சென்னை: இந்தியாவால் தேடப்படும், சர்ச்சைக்குரிய மதபோதகர், ஜாகிர் நாயக்கிற்கு 2016 ஆம் ஆண்டில் மலேசியா புகலிடம் அளித்தது. அன்றில் இருந்து இரண்டு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது தொடர்பாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். காஷ்மீருக்குள் இந்தியா ஊடுருவிவிட்டதாக அவர் கூறினார்.
இதையடுத்து, இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனையில் மலேசியா கருத்து தெரிவிக்க கூடாது என்று இந்தியா தெரிவித்தது. இருப்பினும் மலேசியா தனது நிலைப்பாட்டை தொடர்ந்தது.+
பரம ஏழையாம்.. ரூ.5000தான் வருமானம்.. சொந்தமாக ரூ.220 கோடிக்கு சொத்து.. அதிரும் ஆந்திரா
சிறிய நாடு
இந்த நிலையில்தான் மலேசியாவின் முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்கக்கூடிய பாமாயில் ஏற்றுமதியில் கெடுபிடி காட்ட ஆரம்பித்தது இந்தியா. முதலில் பாமாயில் மீதான வரிவிதிப்பை அதிகரித்தது. கடந்த 8ம் தேதி மலேசிய பாமாயில் இறக்குமதி அதிரடியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக மலேசிய பிரதமர் கருத்து தெரிவித்தார். மலேசியாவின் மேற்குக் கடலோர தீவுகளில் செய்தியாளர்களை சந்தித்த மகாதீர் முகமது, மலேசியா சிறிய நாடு. இந்தியாவுக்கு எங்களால் பதிலடி தர முடியாது என்று தெரிவித்து இருந்தார். இருப்பினும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளியேறுவதற்கு முயற்சிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய கட்டுப்பாடு
இந்த நிலையில்தான் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய பாமாயில் அளவு 18% அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியா-மலேசியா வர்த்தக மோதலின் சமீபத்திய நகர்வாக மேலும் ஒரு, அறிவிப்பு வெளியாகியுள்ளது. "மலேசியாவின் மேலும் பல வர்த்தக நடைமுறைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது" என அமைச்சரவை செயலகம் வணிக அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கான பின்னணி தெரிந்திருந்தாலும், என்னென்ன புதிய பொருட்கள் இதில் சேர்ந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
என்ன பொருட்கள்
பெட்ரோலிய கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், கச்சா பாமாயில், தாமிரம் மற்றும் அலுமினிய கம்பி, நுண்செயலிகள் மற்றும் பிற கணினி மற்றும் தொலைத் தொடர்பு பொருட்கள், டர்போஜெட்டுகள், அலுமினிய இங்காட்கள், எல்.என்.ஜி போன்றவை புதிய கட்டுப்பாடுகளில் அடங்கும். மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.இப்போது புதிய தடைகளும் சேர்ந்துகொள்வதால் மலேசியாவுக்கு கூடுதல் நெருக்கடி.
மேக் இன் இந்தியா
உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளர் இந்தியாதான். இங்கு மனித வளம் அதிகம். எனவே தேவைகளும் அதிகம். எண்ணை பயன்பாடு நமது நாட்டு பாரம்பரிய ரீதியாக ரொம்ப அதிகம். எனவேதான், மலேசியாவை தவிர்த்துவிட்டு இந்தோனேஷியாவை நாடியுள்ளது இந்தியா. கச்சா பாமாயிலை வாங்கி, இந்தியாவிற்குள்ளேயே அதை சுத்திகரிக்கலாம். இதுதான் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வசதியாக இருக்கும் என இந்தியா இதற்கான காரணத்தை சொல்கிறது. மலேசியாவிலிருந்து இந்தியா 2019 இல் 4.4 மில்லியன் டன் பாமாயிலை இறக்குமதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.