ரஜினி முடிவால் வழியே இல்லை.. இனி அதிமுகவை மட்டும்தான் நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளிவிடப்பட்ட பாஜக
சென்னை: அரசியலுக்கு வரமுடியாது என்கிற ரஜினிகாந்த் அறிவிப்பால் தமிழ்நாட்டில் இனி அதிமுகவை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நெருக்கடிக்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தள்ளப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை காலந்தோறும் தமிழகத்தில் பாஜக ஒரு துருப்புச் சீட்டாகவே பயன்படுத்தி வருகிறது. ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருப்பதால் அவருக்கு என இருக்கும் ரசிகர் பட்டாளமே வாக்கு வங்கியாக மாறும் என்பதுதான் பாஜகவின் கணக்கு.
இந்த நம்பிக்கையில்தான் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, ரஜினிகாந்தின் வீட்டுக்கே சென்று சந்தித்து பேசினார். அதேபோல் தமிழக பாஜக தலைவர்களும் பல ஆண்டுகளாக ரஜினிகாந்தின் ஆதரவு எங்களுக்குத்தான் இடைவிடாமல் பேசிவந்தனர்.
பாஜக வற்புறுத்தலால் வருகிறார்.. என்ற கெட்ட பெயரை.. ஒத்தை அறிக்கையில் துடைத்துக் கொண்ட ரஜினி!
ரஜினியும் பாஜகவும்
இதனால்தான் ரஜினிகாந்த் மீது பாஜக ஆதரவாளர் என்கிற முத்திரை இயல்பாகவே விழுந்தது. மத்தியில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்ததாலும் பாஜகவின் தலைவர்கள், ஆலோசகர்கள் தம்மை தேடி வந்து பேசி செல்வதாலும் ஒரு பாதுகாப்பான நிலையை ரஜினிகாந்த் உணர்ந்தவராக இதை ஏற்றுக் கொண்டார்.
ரஜினியை தள்ளிவிட்ட பாஜக
இப்படி மெல்ல மெல்ல தாங்கள் உருவாக்கி வைத்த ரஜினி எங்க ஆள் என்கிற இமேஜை பயன்படுத்தி இந்த தேர்தலில் எப்படியும் அறுவடை செய்துவிடுவது என்பதே பாஜகவின் திட்டம். இதற்காகவே ரஜினிகாந்தை வலுக்கட்டாயமாக தேர்தல் அரசியல் களத்துக்குள் தள்ளிவிட்டது. தேர்தல் அரசியல் களத்துக்கு வந்த ரஜினிக்கு களநிலவரம் புரிந்ததாலோ என்னவோ, என் மீது காவி சாயம் பூச முயற்சிக்காதீங்க என்றெல்லாம் பேசினார்.
அதிமுகவுக்கு மிரட்டல்
ஆனால் பாஜகவோ ரஜினிகாந்தை கட்சி தொடங்க வைத்த கையோடு அதிமுகவுடன் தொகுதி பேச்சுவார்த்தையை நடத்தியது. நாங்க கேட்ட தொகுதியை தராமல் போனால் ரஜினிகாந்துடன் போய்விடுவோம் என்பதுதான் அதிமுகவுக்கான பாஜகவின் மிரட்டலாகவும் இருந்து வந்தது. 40 முதல் 60 தொகுதிகள் தொடங்கி கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து என 100 தொகுதிகள் வரை அதிமுகவை நிர்பந்தப்படுத்திக் கொண்டிருந்தது எல்லாம் ரஜினிகாந்த் இருக்கிறார் என்கிற தைரியத்தில்தான்.
பாஜகவின் ப்ளான்
ரஜினிக்கான இமேஜ், ரசிகர்கள் வாக்குகள் பிளஸ் அதிமுகவின் வாக்குகள்.. இதுவே தமிழகத்தில் 4 அல்லது 5 எம்.எல்.ஏக்களை கொடுத்துவிடும் என்பதுதான் பாஜகவின் கணக்கு. ஒரே நேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்ய துடியாய் துடித்த பாஜகவின் கனவுக்கு ரஜினிகாந்தின் குட்பை அறிவிப்பு வேட்டு வைத்துவிட்டது. ரஜினிகாந்த் என்கிற ஃபேக்டர் தேர்தல் களத்தில் இல்லை என்றாகிவிட்டது. ரஜினிகாந்த், ரஜினிகாந்த், பாஜகவுக்கு ஓட்டுப் போடுங்கள் என வாய்ஸ் கொடுத்து பெயரைக் கெடுத்துக்குவார் என்றெல்லாம் எதிர்பார்க்கவும் முடியாது.
அதிமுகவே தஞ்சம்
ஆகையால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கான ஒற்றை நம்பிக்கையாக இருப்பது அதிமுக மட்டும்தான். மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக மட்டுமே அதிமுகவை மிரட்டலாமே தவிர, இனி ரஜினியோடு போய்விடுவோம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க முடியாது. அதிமுகவிடம் இதுவரை நடத்திய மிரட்டலான தொகுதி பேரங்கள் எல்லாம் இனி கமுக்கமாகத்தான் இருக்கும். ஏனெனில் அதிமுகவும் அழிந்தாலும் பரவாயில்லை பாஜக வேண்டாம் என்கிற முடிவுக்கு போய்விட்டால் நடுத்தெருவுக்குத்தான் போக வேண்டும். உள்ளதும் போச்சுடா என்கிற கதிதான் பாஜகவுக்கு ஏற்படும்.