கட்டி வைத்த கனவு கோட்டை.. ஒரே பேட்டியில் அடித்து நொறுக்கிய ரஜினிகாந்த்.. காலியான பாஜகவின் திட்டம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை வைத்து தமிழகத்தில் கால் பதிக்கலாம் என்று நினைத்த பாஜக கட்சிக்கு ரஜினியின் இன்றைய பேட்டி பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த 2017 டிசம்பரில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட போது அதற்காக அதிகம் சந்தோசம் அடைந்தது அவரின் ரசிகர்களை விட, பாஜகவை சேர்ந்த தமிழக தலைவர்கள்தான். கொள்கை என்ன? என்று கேட்டாலே தலையை சுற்றும் ரஜினி கூட, நான் தொடங்க போவது ஆன்மீக அரசியல்தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.
திராவிட அரசியல் உலகில், ஆன்மீக அரசியல் என்ற பெயரை கேட்டதும், ரஜினியை பாஜக தூக்கிவைத்து கொண்டாடியது. ரஜினிதான் நம்முடைய அடையலாம் என்று பாஜக சந்தோசமாக கொண்டாடியது.
எழுச்சி ஏற்பட்டால்தான் அரசியலுக்கு வருவேன்.. ரஜினிகாந்த் ஒரே போடு
ரஜினி எப்படி
ரஜினிகாந்த் கொடுத்த எல்லா பேட்டியையும் தீவிரமாக ஆதரித்து வந்த கட்சிதான் தமிழக பாஜக. அவரின் நிலைப்பாடு அனைத்தையும் தமிழக பாஜக வெளிப்படையாக ஆதரித்தது. பாஜகவை ரஜினி விமர்சனம் செய்து இருந்தாலும் கூட, பாஜக தலைவர்கள் யாரும் ரஜினியை எப்போதும் விமர்சனம் செய்தது கிடையாது. எஸ்வி சேகர், தமிழிசை சௌந்தரராஜன், நாராயணன் திருப்பதி, கோலாகல சீனிவாசன் என்று ரஜினியை ஆதரிக்க பாஜக சார்பில் பெரிய கூட்டமே இருந்தது.
ஆர்எஸ்எஸ் ஆதரவு
அதேபோல் பாஜகவின் நெருக்கமான ஆர்எஸ்எஸ் அமைப்பும் ரஜினியை தீவிரமாக ஆதரித்தது. குருமூர்த்தி தொடங்கி ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலர் ரஜினிக்கு நேரடியாக ஆலோசனைகளை வழங்கினார்கள். ஆர்எஸ்எஸ் சார்பாக சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படும் பலர் ரஜினியை நேரில் சந்திப்பதும், அரசியல் தொடர்பான அறிவுரை வழங்குவதும் வழக்கமாக இருந்தது.
என்ன நம்பிக்கை
பாஜகவின் நம்பிக்கை ஒன்றுதான். ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார். அவருடன் கூட்டணி வைக்கலாம். திமுகவை இதன் மூலம் தோல்வி அடைய செய்யலாம். அதன்பின் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்கலாம் என்று நினைத்தார்கள். திமுக கூட்டணி வலுவாக இருப்பதால், தங்களுக்கு ரஜினி போன்ற வலுவான முகம் வேண்டும் என்று பாஜக இந்த திட்டத்தை வகுத்தது.
ரஜினி எப்படி
இதற்கு ரஜினிகாந்தும் தொடக்கத்தில் பெரிய அளவில் ஆதரவு அளித்தார். பாஜக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஆதரித்தார். பணமதிப்பிழப்பு நீக்கம் தொடங்கி சிஏஏ வரை பாஜகவின் மிக மோசமான விமர்சனங்களை பெற்ற திட்டங்களை கூட நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக ஆதரித்தார். பெரியாரை கூட எதிர்த்தார். அதோடு, இதனால் ரஜினிகாந்த் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஆனால் விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல், பாஜகவை ஆதரித்து வந்தார்.
ஆனால் டிவிஸ்ட்
பாஜகவை இப்படி தீவிரமாக ஆதரித்து வந்தவர்தான் திடீரென்று, திருவள்ளுவருக்கு எனக்கும் காவி சாயம் பூச பார்க்கிறார்கள். நானும் மாட்ட மாட்டேன், திருவள்ளுவரும் மாட்ட மாட்டார் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு பாஜகவிற்கு முதல் அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின் சில நாட்களில், எனக்கு பாஜக ஆள் என்று சாயம் பூச நினைக்கிறார்கள். அது எப்போதும் நடக்காது என்று மீண்டும் ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.
பாஜக அதிர்ச்சி
இந்த இரண்டு பேட்டியும் பாஜகவிற்கு பெரிய அளவில் அதிர்ச்சி கொடுத்தது. அதோடு இஸ்லாமிய தலைவர்களை ரஜினி சந்தித்து பேசியதும் நடந்தது. பாஜக -ரஜினி இடையே அப்போதுதான் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எனக்கு முதல்வர் ஆகும் எண்ணம் இல்லை. நான் கட்சியின் தலைவராக இருப்பேன். ஆனால் ஆட்சிக்கு தலைவராக இருக்க மாட்டேன். அனைத்து தரப்பிலும் வல்லமை படைத்தவர்கள் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் .கொள்கைகள் தான் கட்சி. முதலமைச்சர் பதவி ஆசை என்பது எனது ரத்தத்திலேயே இல்லை.
ஆட்சி
ஆட்சிக்கு வரும்போது 71 வயதாகி விடும். இப்போது விட்டால் அடுத்து பிடிக்க முடியும் என்ற நிலையில் இல்லை. தப்பு செய்தால் சுட்டிக்காட்டுவோம். இல்லையென்றால் தூக்கி எறிவோம். ஆட்சி அதிகாரம் மீது எனக்கு விருப்பம் இல்லை. என்னை வருங்கால முதல்வர் என்று ரசிகர்கள் என்று யாரும் அழைக்க வேண்டாம். மூலை முடுக்கெல்லாம் எழுச்சி உருவான பிறகு நான் வருகிறேன். கட்சி வேறு, ஆட்சி வேறு, தலைமை வேறு. நாடு முழுவதும் இந்த புரட்சி பரவ வேண்டும், என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.
நம்பிக்கை இல்லையா
ரஜினியின் இந்த அறிவிப்பு காரணமாக மொத்தமாக அவரின் ரசிகர்கள் நம்பிக்கை இழந்து உள்ளனர். ரஜினி இதே எண்ணத்தோடு அரசியலில் களமிறங்கினால் அவர் தோல்வி அடையவே அதிகமாக வாய்ப்புள்ளது. இருக்கிற ஆதரவையும் ரஜினி இழக்கவே அதிக வாய்ப்புள்ளது. இதனால் அவரை நம்பி தேர்தலில் களமிறங்க பாஜக யோசிக்க தொடங்கி உள்ளது. ரஜினியை நம்பி திமுகவை எதிர்க்க முடியாது என்ற நிலைக்கு பாஜக வந்துள்ளது.
பாஜக நிலை
ரஜினியை நம்பி அதிமுகவை பகைக்க முடியாது. இப்போது ஆட்சி வேண்டாம் என்று சொல்பவர், தேர்தலுக்கு முன் அரசியலே வேண்டாம் என்று சொல்ல வழி உள்ளது. அதேபோல் ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லையென்றால் அவரின் தொண்டர்களும் தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் உழைக்க மாட்டார்கள். தேர்தலுக்கு பின் அவர்களுக்கு பதவி இல்லை என்று வேறு ரஜினி கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இது தங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பாஜக நினைக்கிறது.
போச்சு
ரஜினியை நம்பி பாஜக தமிழகத்தில் கட்ட நினைத்த கோட்டை பேஸ்மெண்ட் போட தொடங்கியதும் விழுந்து நொறுங்கி உள்ளது. இதனால் மீண்டும் அதிமுகவுடனே சேர்ந்து விடலாம் என்று பாஜக நினைக்கிறது. திமுகவை எதிர்க்க அதிமுகதான் சரியாக இருக்கும். ரஜினியை வைத்து பெரிய திட்டங்களை தீட்ட முடியாது என்று பாஜக முடிவெடுத்துள்ளது என்கிறார்கள். இந்த திடீர் அரசியல் திருப்பம் திமுகவிற்கு பெரிய அளவில் சாதகமாக பார்க்கப்படுகிறது.