சசிகலா போல டிடிவி தினகரனும் சரியான முடிவை எடுப்பார்.. அடுத்த ஆட்டத்தை அப்பட்டமாக சொன்ன பாஜக சிடிரவி
சென்னை: அதிமுகவை வெற்றி பெற வைக்க சசிகலாவை ஆப் செய்த பாஜக தற்போது தினகரனுக்கு குறி வைத்திருக்கிறது என்பதை வெளிப்படையாகவே அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி அறிவித்துள்ளார்.
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்தார். அரசியலுக்கு முற்றாக குட்பை சொல்லாமல் ஒதுங்கி மட்டுமெஎ இருக்கிறேன் என சசிகலா அறிவித்திருந்தார்.
சசிகலா- தினகரன் மோதல்
அந்த அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது; அதிமுகவின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் எனவும் கூறியிருந்தார். மேலும் டிடிவி தினகரனையும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என சசிகலா உத்தரவிட்டார். ஆனால் தினகரன் இதை நிராகரித்திருந்தார்.
பாஜக வரவேற்பு
இருந்த போதும் விரைவில் டிடிவி தினகரனும் ஏதோ ஒரு முடிவை அறிவிக்கவே வாய்ப்பிருக்கிறது என கணிக்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி பேட்டி அளித்துள்ளார். சசிகலா ஒதுங்கி இருப்பது குறித்து கூறிய சிடி ரவி, சசிகலாவின் முடிவரை வரவேற்கிறேன் என்றார்.
தினகரனும் முடிவெடுக்க வேண்டும்
மேலும் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற டிடிவி தினகரனும் உதவ வேண்டும். ஆகையால் டிடிவி தினகரனும் சரியான முடிவை விரைவில் எடுக்க வேண்டும் என்றார். எங்க அப்பா குதிருக்குள் இல்லை என்பதை போல சசிகலா, தினகரன் விவகாரங்களில் பாஜகவின் நெருக்கடி என்ன என்பதை பட்டவர்த்தனமாகவே போட்டுடைத்துள்ளார் சிடி ரவி.
தினகரன் அடுத்த அறிவிப்பு?
வேட்புமனுத் தாக்கல் அடுத்த வாரம் தொடங்குவதற்குள் பாஜகவின் சித்துவிளையாட்டுகளில் சிக்கி சின்னாபின்னமாகப் போவது எத்தனை தலைகளோ? தமிழக தேர்தல் களம் இன்னும் எத்தனை தடாலடிகளை எதிர்கொள்ளப் போகிறதோ? எல்லாமே டெல்லிக்கே வெளிச்சம்.