ஒப்பந்த காலம் முடிந்த பின்னும் தொடர்ந்து முட்டை சப்ளை செய்வது சட்டவிரோதம்.. ஐகோர்ட் கருத்து
சென்னை: சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் தமிழக சமூக நலத்துறை இன்று மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் நிறுவனங்கள் தொடர்ந்து முட்டை சப்ளை செய்வது, சட்டவிரோதம் என்று மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை, வரும் ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
முன்னதாக முட்டை கொள்முதல் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு டெண்டர் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில், தமிழகம் அல்லாத பிற மாநில முட்டை உற்பத்தியாளர்கள் டெண்டரில் பங்கேற்க இயலாது. தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து அந்தந்த பகுதி முட்டை உற்பத்தியாளர்கள் தான் பங்கேற்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி மகாதேவன், அரசாணை முறையாக இல்லை எனவும் பல்வேறு பாகுபாடுகள் உள்ளதாக கூறி அதனை ரத்து செய்வதாக அறிவித்தார்.
தனி நீதிபதி மகாதேவனின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரியே, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.