முதல்வர் பழனிச்சாமியை தொடர்ந்து வெளிநாடு செல்ல தயாராகும் ஓபிஎஸ்? இது தான் காரணமாம்!
Recommended Video
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது 41 நிறுவனங்களுடன் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளதாக முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்தார். இதன் மூலம் சுமார் 35 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமியை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வெளிநாட்டு பயணம் செல்ல இருப்பதாக தற்போது ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூர், சீனா அல்லது இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
பன்னீர் செல்வத்தின் கீழ் உள்ள வீட்டு வசதி துறை உள்ள நிலையில் அவர் வெளிநாடு சென்று கட்டுமானம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய முறை ஆகியவற்றை பார்வையிட கூடும் என்று கூறப்படுகிறதாம்.
மேலும் சிங்கப்பூரில் நடைபெறும் கட்டுமானம் தொடர்பான கண்காட்சியிலும் துணை முதல்வர் பங்கேற்க உள்ளதாகவும் ஊடகத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் தேதிகள் இன்னும் சரியாக முடிவாகவில்லை என்றும் எனினும் துணை முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.