தமிழகத்தில் ஓய்வு பெற்ற விஏஓ-க்களுக்கு மீண்டும் பணி.! தேர்வெழுதிவிட்டு காத்திருப்போர் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மீண்டும் பணி வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது இளைஞர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆயிரம் ஓய்வு பெற்ற விஏஓ-க்களை மீண்டும் பணியமர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவர்கள் 1 முதல் 3 கிராமங்களை நிர்வகிப்பார்கள் என கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 12, 616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் 2,896 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் உள்ளன. பொறுப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை, காலிப் பணியிடங்களில் நியமிக்க தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த பிப்ரவரியில் அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையில் விஏஓ பணிகளுக்கான காலியிடங்களில் தகுதியும், சிறப்பான அனுபவமும் வாய்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
ஏற்கனவே பொறுப்பான வகையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை காலி பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் முதற்கட்டமாக ஓய்வு பெற்ற சுமார் 1000 கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தும் நடவடிக்கை பல்வேறு மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.
ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் பணியமர்த்தப்பட உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, ரூ.15,000 தொகுப்பூதியம் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான ஆலோசனையை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வருவாய் துறை நிர்வாகம் வழங்கியுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்யகோபால், காலி பணியிடங்களில் ஓய்வு விஏஓ அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கைகளை துவக்குமாறு அறிவுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
பணியமர்த்தப்பட உள்ள ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்கள் தற்காலிக பணி அடிப்படையில், நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வரி வசூல், அரசு நலத்திட்டங்களுக்கான சான்றுகள் வழங்கல், பயிர் காப்பீட்டிற்கான மதிப்பீடு உள்ளிட்ட பணிகளை மீண்டும் பணியிமர்த்தப்பட உள்ள விஏஓ-க்கள் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியாயளர் தேர்வாணையம் புதிய பணியாளர்களை நியமிக்கும் வரை, ஓய்வு பெற்ற விஏஓ-க்கள் பணியில் இருப்பர் என கூறப்பட்டுள்ளது. இந்த நியமனம் ஓராண்டு அல்லது தேவையான காலம் வரை நீடிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவு தேர்வெழுதிவிட்டு காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.