Agni Natchathiram: இன்றுடன் விடை பெறுகிறது வாட்டி வதைத்த கத்திரி வெயில்.. மழையால் குளிரும் தமிழகம்
சென்னை: தமிழகத்தை வாட்டி வதைத்த கத்திரி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது. இதனால் வெப்ப நிலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், கடந்த 4ம் தேதி துவங்கியது. ஆரம்பத்தில் பெரிதாக வெப்பம் வாட்டவில்லை. கரூர், மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டவில்லை.
இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட மக்களுக்கு அதிர்சியளித்தது அம்பன் புயல். இந்த புயல் தெற்கு வங்க கடலில் உருவாகி மேற்கு வங்கத்தில் 20ஆம் தேதி கரையைக் கடந்தது.
கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை.. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி நாளை முக்கிய முடிவு?
அம்பன் புயல் செய்த வேலை
அம்பன் புயல் காற்றில் இருந்த ஈரப்பதத்தை எடுத்து சென்றதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெயில் கொளுத்த தொடங்கியது. 22ம் தேதி அதிகபட்சமாக 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்தது. அன்றைய தினம் சென்னையில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அனல் காற்று வீச தொடங்கியது. அடுத்த மூன்று நாட்களும் சென்னையில் 100 டிகிரியை தாண்டியது வெப்பநிலை.
திருத்தணியில் அதிகபட்ச வெயில் பதிவானது
22ஆம் தேதி திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட், 23ஆம் தேதி 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் பதிவான அதிகபட்ச வெயில் அளவு இதுவாகும். சென்னையின் மீனம்பாக்கத்தில், அதிகபட்சமாக, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை, சேலம், திருச்சி, வேலூர், தருமபுரி உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் வறுத்தது.
வெயில் நீடிக்கும்
இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும், உள் மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்படும் என்றும், ஜூன் மாதத்திற்கு பிறகு தான் இயல்பான வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று, சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நங்கவள்ளி உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Recommended Video
மழை ஆரம்பம்
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை முதல் பலத்த மழை பெய்தது. இடையில் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் சிரமம் அடைந்தனர். அதேபோல தருமபுரி மாவட்டத்தின் பாலக்காடு, பொம்மிடி பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரமாக மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.