வேளாண் மசோதாக்கள்... விவசாயிகளிடம் ஆலோசிக்கவில்லை... டிடிவி தினகரன் கண்டனம்!!
சென்னை: விவசாயத்தில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட மசோதாக்களை மாநில அரசுகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளிடம் முழுமையாக ஆலோசிக்காமல் மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி இருப்பது சரியானதல்ல என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
லோக் சபாவில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஷிரோண்மணி அகாலிதள எம்.பி.யும் மத்திய உணவு பதப்படுத்துல் துறை அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்றும் கார்ப்பரேட்டுகளுக்கு, தனியார்களுக்குச் சாதகமானவை என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வேளாண் மசோதா...திடீர் பல்டி அடித்த ஹர்சிம்ரத் பாதல்...விவசாயிகள் மீது பழி!!
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று தனது ட்விட்டர் பதிவில், "விவசாயத்தில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட மசோதாக்களை மாநில அரசுகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளிடம் முழுமையாக ஆலோசிக்காமல் மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி இருப்பது சரியானதல்ல.
இம்மசோதாக்களில் உள்ள விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களில் திருத்தம் செய்த பிறகே மாநிலங்களவையில் அவற்றைக் கொண்டுவர வேண்டும்.
நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையில் செயல்படுத்தப்படும் எத்தகைய மாற்றமும் விவசாயிகளுக்குப் பயன்தருவதாக மட்டுமே அமைய வேண்டும். அதை விட்டுவிட்டு ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.