வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரம்... புதிதாக சர்ச்சை போஸ்டர்
சென்னை: கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி நெல்லையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முத்துகுமாரசாமி தற்கொலைக்கு அப்போது வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, அமைச்சரவையில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஜெயலலிதா நீக்கினார். அதிமுக ஆட்சி நடந்த நிலையிலும், பாரபட்சமின்றி கைது, விசாரணை என அக்ரி கிருஷ்ணமூர்த்தி அலைக்கழிக்கப்பட்டார்.
இதனிடையே முத்துக்குமாரசாமி தற்கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வழக்கறிஞர் பிரம்மா என்பவர் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தை மையமாக வைத்து இப்போது புதிய போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில் முத்துகுமாரசாமி தற்கொலை செய்து 5 ஆண்டுகள் கடந்தும் ஐயமிக்கவர்கள் தண்டிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
TNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்
முத்துகுமாரசாமி தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த போஸ்டரில் கேட்டுள்ளார். இவர் முத்துகுமாரசாமிக்கு உறவினர் என்றும், ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வழக்கறிஞர் பிரம்மா அகில இந்திய ராகுல்காந்தி ரத்ததான கழகம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த போஸ்டர் சர்ச்சையை எழுப்பியுள்ளதோடு சமூக வலைதளங்களில் அதிமுக மீதான விமர்சனங்களுக்கு காரணமாகவும் உள்ளது.