மூச்சுதிணறல்.. விழுப்புரம் மருத்துவமனையில் இருந்து சென்னை அழைத்துவரப்படுகிறார் அமைச்சர் துரைக்கண்ணு
சென்னை: தமிழக விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணு மூச்சு திணறல் காரணமாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில். அவரை சென்னைக்கு அழைத்துவந்து மேல் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 72). இவர் அங்குள்ள பாபநாசம் தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இரண்டாவது முறையாக 2016ம் ஆண்டு வெற்றிப் பெற்று அதிமுக ஆட்சியமைத்த போது. துரைக்கண்ணு அமைச்சரானார். தமிழகத்தின் விவசாயம் மற்றும் விலங்குகள் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றார். எடப்பாடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னரும் விவசாய துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவு செய்தி கேட்டு சேலம் விரைந்தார் அமைச்சர் துரைக்கண்ணு. செல்லும் வழியில் அமைச்சருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரை உடனே அருகில் இருந்த விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை அழைத்துவரப்படுகிறார்.