வெங்காயம் விலை உயருதுன்னா.. ஏன் உயராது.. சிந்திச்சுப் பாருங்க மக்களே!
Recommended Video
சென்னை: எல்லா இடங்களிலும் விவசாயம் சிக்கலை சந்தித்து வருகிறது. நீர்ப்பாசனத்திற்கு தண்ணீர் இல்லை என்பது முக்கியப் பிரச்சினை. விவசாய செலவுகள் அதிகரித்திருப்பது இன்னொரு சிக்கல். கடன் வாங்கியதைக் கட்ட முடியாத நிலை.
பருவ மழை பொய்ப்பது, நகரமயமாக்கல் அதிகரிப்பது, பல்வேறு திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவது, விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல்இருப்பது இப்படிப் பல பிரச்சினைகளை விவசாயம் சந்தித்து வருகிறது.
விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட நாடு நம் பாரத நாடு. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்திலும் விவசாயிகள் துன்பப்படுகின்றனர். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பார்கள். பயிர்களை விளைவித்து அறுவடை செய்து அதை விற்றுக் கணக்குப் பார்த்தால் வரவை விட செலவு அதிகமாக உள்ளது.
முன்பெல்லாம் பல்லாயிரம் மக்கள் நம் நாட்டில் விவசாயம் செய்து வந்தனர். ஆனால் தற்போது எல்லோரும் தங்கள் பிள்ளைகள் பெரிய மென்பொருள் அலுவலகத்தில் வேலைப் பார்ப்பதையே விரும்புகின்றனர். இக்காலத்துப் பிள்ளைகளும் விவசாயம் செய்வதை கவுரவக் குறைவாகப் பார்க்கின்றனர். அதனாலேயே உழவு வேலைக்கு ஆள் கிடைப்பது அரிதாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் அதிகமாகத் தர வேண்டி உள்ளது.
கருணாநிதி முதல்வராக இறக்க கூடாது என்று நினைத்தேன்.. அதில் வெற்றியும் பெற்றேன்.. சீமான் பரபர
டிராக்டர் வாங்க ஐந்து லட்சம் ஆள் கூலி ஐநூறு ரூபாய் அதைத் தவிர உரம் பூச்சிக்கொல்லி மருந்து என செலவு நீள்கிறது. அப்படியே பொருளை விற்பனை செய்ய சந்தைக்குக் கொண்டு வரும் போது அதை விவசாயியிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி கொஞ்சம் மட்டும் விற்று விட்டு மற்றதை பதுக்கி வைத்துவிடுகிறான். பற்றாக்குறை ஏற்படும் போது அதை சந்தையில் அதிக விலை வைத்துக் கொள்ளை லாபம் பார்த்து விடுகிறான். இதில் நஷ்டமடைவது விவசாயி தான். விவசாயத்தில் நஷ்டம் அடைவதால் விவசாயி கடன் தொல்லைத் தாங்காமல் பல விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.
காணி நிலம் வேண்டும் உழவருக்குக் காணி நிலம் வேண்டும் என விவசாயம் செய்வதற்கே நிலத்தைத் தேட வேண்டிய சூழலை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறோம். சென்னை மதுரை திருச்சி கோவை போன்ற பெருநகரங்களில் விளைநிலங்கள் எல்லாம் மனைகளாக மாறிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளிடமிருந்து நிலத்தைக் குறைந்த விலையில் வாங்கி ரியல் எஸ்டேட் அதிபர்கள் அதை மனைகளாகப் பிரித்து விற்றுக் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. காய்கறிகளின் விலை கடந்த வாரம் உச்சத்தைத் தொட்டு உள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 66 ரூபாய் இன்று. அதற்குக் காரணம் அதிகப்படியான விளைச்சல் இல்லாததும் சில வியாபாரிகள் பதுக்கி வைப்பதே ஆகும்.
இரண்டு விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளிகளை விற்க வருகின்றனர். அந்த சந்தையில் ஒருவருடைய தக்காளியை மட்டும் மக்கள் வாங்குகின்றனர். மற்றவரின் தக்காளியை வாங்கவே இல்லை. மற்றவரின் தக்காளி அழுகி விடும் என்ற நிலையில் தக்காளி ஜாம் செய்யும் நிறுவனம் கிலோ இருபது ரூபாய் விற்கும் தக்காளியை வெறும் கிலோ ஆறு ரூபாய்க்குக் கொள்முதல் செய்கிறது. இதனால் அந்த விவசாயி மன உலைச்சலால் தற்கொலை செய்துக் கொள்கிறான்.
ஒருவன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் மூன்று வேளையும் உணவு தான் உட்கொள்ள வேண்டும்.உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்று நினைத்தால் மட்டுமே விவசாயியும் வாழ முடியும். விவசாயத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் 19% ஜி.டி.பி விகிதம் விவசாயத்திலிருந்துக் கிடைக்கிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டுபின் செல்பவர் என்று வள்ளுவப் பெருந்தகை உழவின் மகத்துவத்தை விளக்கியுள்ளார்.
இந்தியாவில் 2019ஆம் ஆண்டு 808 பேர் விவசாயிகள் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளனர். இது போன்ற நிலை தொடர்ந்தால் ஒரு கிலோ அரிசி ஆயிரம் ரூபாய் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்த நெல் ஜெயராமன் அவர்களும் நம்மாழ்வாரும் இயற்கை விவசாயத்தின் மகிமையை அழகாகக் கூறியுள்ளனர். ஏற்கனவே சோமாலியா நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அது போல் நம் நாடும் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இதுவே சிறந்த நேரம். விழித்தெழு தமிழா. விவசாயத்தை மேம்படுத்தி நம் நாட்டைச் சிறந்த நாடாக மாற்றுவோம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில் உயரும் உன் மதிப்பு அயலாநாட்டில் என்று விவசாயத்தின் பெருமையை உணர்ந்து விவசாயிகளைப் போற்றுவோம்.
- ஜி. உமா