நெல் முதல் மிளகாய் வரை.. 30 வகையான பயிர்களுக்கு காப்பீடு! விவசாயிகளை குஷிபடுத்திய அமைச்சர் எம்ஆர்கே
சென்னை: பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பதிவுசெய்து, பயனடையுமாறு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உளுந்து, துவரை, மக்காச்சோளம், பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், சூரியகாந்தி, கரும்பு, பருத்தி, வாழை, மரவள்ளிகிழங்கு, வெங்காயம், உருளைக்கிழங்கு, சிவப்புமிளகாய், கேரட், கத்திரி, வெண்டை, தக்காளி, பூண்டு உள்ளிட்ட பயிர்களையும் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
பயிர் காப்பீடு
பருவ மழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும் பொழுது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு 2022- 2023-ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இதுவரை 3.43 இலட்சம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடைசி நாள்
தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் 15.11.2022 ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கடைசி நாள் 31.10.2022 ஆகும். கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை கடைசி நாள் 15.12.2022 ஆகும்.
காப்பீடு பயிர்கள்
மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் (சிறப்பு பருவம்) நெற்பயிர், மக்காச்சோளம், பருத்தி மற்றும் வெங்காயம் காப்பீடு செய்யவும் குளிர்கால பருவ (ராபி) பயிர்களான உளுந்து, துவரை, மக்காச்சோளம், பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், சூரியகாந்தி, கரும்பு, பருத்தி நெல் தரிசில் உளுந்து, நெல் தரிசில் பச்சைப்பயிறு, பருத்தி, கொண்டைக்கடலை ஆகிய வேளாண் பயிர்களும் வாழை, மரவள்ளிகிழங்கு, வெங்காயம், உருளைக்கிழங்கு, சிவப்புமிளகாய், கேரட், கத்திரி, வெண்டை, தக்காளி, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் முட்டைக்கோஸ் ஆகிய தோட்டக்கலை பயிர்களும் விவசாயிகள் காப்பீடு செய்வதற்காக தேசிய பயிர் காப்பீட்டு இணையதளம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கவனத்திற்கு
எனவே கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) இணையதளத்தில் உள்ள "விவசாயிகள் கார்னரில்" நேரிடையாகவோ காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழ் நாடு அரசு கேட்டுக் கொள்கிறது.
என்னென்ன ஆவணங்கள்
விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / இ-அடங்கல் /விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadharr Card) நகலுடன், பயிர் காப்பீட்டுத் தொகையில், 1.5 சதவீதத்தொகையையும் ஓராண்டு பயிர்கள் மற்றும் வணிகப் பயிர்களுக்கு 5 சதவீத தொகையையும் விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். இதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
அரசு அறிவுறுத்தல்
எனவே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மேற்படி பயிர்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கிகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.