கியரை மாற்றிய அதிமுக.. அமைப்பு ரீதியாக மாவட்ட பிரிப்பு! செயலாளர்கள் நியமனம்.. ஓபிஎஸ்-எடப்பாடி அதிரடி
சென்னை: நிர்வாக வசதிக்காக அதிமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களையும் நியமித்துள்ளது அதிமுக.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், அதிமுக தீவிர கதியில் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் களமிறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அமைப்பு ரீதியான மாவட்டங்கள் அதிரடியாக பிரிக்கப்பட்டுள்ளன. அதிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக,
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய என்று, 5 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
மாவட்ட பிரிப்பில்தான் அரசியல் எதிர்காலமே இருக்கு.. கடுமையாக போராடும் நத்தம் விஸ்வநாதன்
கழகப் பணிகள்
கழக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் கழகப் பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும் சில மாவட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக பிரிக்கப்படுகிறது. இவ்வாறு பிரிக்கப்பட்டு, பின் வரும் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும் ,மாவட்ட கழக செயலாளர்கள் கீழ்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப் படுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் கழக செயலாளராக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் நியமனம். இதில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்- இதில் திருப்போரூர் மதுராந்தகம் செய்யூர் ஆகிய தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்த மாவட்டத்துக்கான கழக செயலாளராக திருக்கழுகுன்றம் ஆறுமுகம் நியமிக்கப்படுகிறார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்
தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு ஆகியவை அடங்கிய செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு சிட்லபாக்கம் ராசேந்திரன், சோழிங்கநல்லூர், ஆலந்தூர் அடங்கிய சென்னை புறநகர் மாவட்டத்துக்கு கே.பி.கந்தன் ஆகியோர் கழகச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, தொகுதிகளை உள்ளடக்கிய திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக பொன்னேரி சட்டசபை தொகுதி உறுப்பினர் பலராமன் நியமிக்கப்படுகிறார். மதுரவாயல், பூந்தமல்லி தொகுதிகளை உள்ளடக்கிய திருவள்ளூர் மத்திய மாவட்டத்துக்கான செயலாளராக அமைச்சர் பெஞ்சமின் நியமிக்கப்படுகிறார். அம்பத்தூர், ஆவடி தொகுதிகளை உள்ளடக்கிய திருவள்ளூர் தெற்கு மாவட்டத்துக்கு அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ அலெக்சாண்டர் கழகச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
மாதவரம், திருவொற்றியூர்
மாதவரம், திருவொற்றியூர் தொகுதிகளை உள்ளடக்கிய திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, கழகச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். திருவள்ளூர் மற்றும் திருத்தணி தொகுதிகளை உள்ளடக்கிய திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ரமணா நியமிக்கப்படுகிறார்.
வேலூர்
வேலூர், காட்பாடி தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் மாநகர் மாவட்டத்துக்கு, எஸ்ஆர்கே அப்பு, கழகச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். குடியாத்தம் கீழ்வைத்தியனான்குப்பம், அணைக்கட்டு தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக வேலழகன் நியமிக்கப்படுகிறார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் உள்ளடக்கிய திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அமைச்சர் வீரமணி கழகச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். சோளிங்கர், அரக்கோணம் தொகுதிகளை உள்ளடக்கிய ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு, அரக்கோணம் எம்எல்ஏ ரவி கழகச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு சிவி சண்முகம்
திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மைலம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டத்திற்கு அமைச்சர் சிவி சண்முகம் கழக செயலாளராக நியமிக்கப்படுகிறார். திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு கழக செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
அமைச்சர் வேலுமணி
தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சூலூர் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய கோவை புறநகர் தெற்கு மாவட்டத்துக்கான கழக செயலாளராக அமைச்சர் வேலுமணி நியமிக்கப்படுகிறார். கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வடக்கு, சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகள் அடங்கிய கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக அம்மன் கே அர்சுனன் நியமிக்கப்படுகிறார்.
கோவை புறநகர் வடக்கு
கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், அவிநாசி ஆகியவை அடங்கிய கோவை புறநகர் வடக்கு மாவட்டத்துக்கான செயலாளராக எம்எல்ஏ அருண்குமார் நியமிக்கப்படுகிறார். உதகமண்டலம், கூடலூர், குன்னூர் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மாவட்டத்திற்கு வினோத், கழகச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி மேற்கு, துறையூர் தொகுதிகள் அடங்கிய திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நியமிக்கப்படுகிறார். ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய தொகுதிகள் அடங்கிய திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி நியமிக்கப்படுகிறார்.
அமைச்சர் ஓஎஸ் மணியன்
மணப்பாறை, திருவெரும்பூர், லால்குடி தொகுதிகள் உள்ளடங்கிய திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் நியமிக்கப்படுகிறார். நாகப்பட்டினம் கீழ்வேலூர், வேதாரண்யம் தொகுதிகள் அடங்கிய நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
நத்தம் விஸ்வநாதன்
மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி தொகுதிகள் உள்ளடக்கிய மயிலாடுதுறை மாவட்டத்துக்கு செந்தில்நாதன் செயலாளராக நியமிக்கப்படுகிறார். நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, பழனி ஆகிய தொகுதிகள் அடங்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு நத்தம் விஸ்வநாதன் கழகச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் தொகுதிகள் உள்ளடக்கிய திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய திருநெல்வேலி மாவட்டத்துக்கு தச்சை என்.கணேசராஜா கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி
கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக, செங்கோட்டை நகர கழகச் செயலாளராக உள்ள, கிருஷ்ண முரளி நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி, ஆலங்குளம் தொகுதிகள் உள்ளடங்கிய தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளராக செல்வ மோகன்தாஸ் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தென்காசி தொகுதி சட்டசபை உறுப்பினராகும்.
ஓபிஎஸ், எடப்பாடி வேண்டுகோள்
கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். கழகம் மற்றும் சார்பு அமைப்புகள் திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.