அதிமுக துவங்கி 47வது ஆண்டு விழா கோலாகலம்.. எம்ஜிஆர், ஜெ. சிலைக்கு எடப்பாடி, ஓபிஎஸ் மாலை அணிவிப்பு
சென்னை: அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா மாநிலம் முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அதிமுகவை 1972-ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி எம்ஜிஆர் உருவாக்கினார். 1977ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக முதல் முறையாக வெற்றி பெற்றது.
இதன்பிறகு எம்ஜிஆர் மறைவுக்கு பிறகே திமுக ஆட்சிக்கு வர முடிந்தது. இதுவரை மொத்தம் 27 ஆண்டாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது அதிமுக. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமையும் இக்கட்சிக்கு உள்ளது.
ஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை முற்றுகையிட்ட பக்தர்கள்... பத்தனம்திட்டாவில் பதற்றம்
5 முதல்வர்கள்
எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என 5 முதல்வர்களை அதிமுக தந்துள்ளது. கட்சியின் முக்கிய தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரட்டை தலைமையின்கீழ், அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தொண்டர்களுக்கு கடிதம்
இதையொட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், தொண்டர்களுக்கு கூட்டாக நேற்று கடிதம் எழுதினர்.
ராயப்பேட்டையில் விழா கோலம்
அதிமுக 47வது ஆண்டு துவக்க விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினர். இதில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோலாகலம்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், அதிமுக ஆண்டுவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டு வண்டி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை அதிமுக நிர்வாகிகள் நடத்தி பரிசுகள் அளித்து வருகிறார்கள்.