அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்... எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் - அன்புமணி
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதிக இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் படுபரபரப்பாக உள்ளது. ஆளும்கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்போதைக்கு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது பற்றி பின்னர் பேசி முடிவெடுக்கப்படும்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணையும் பாமக - வெற்றிக்கனியை பறிக்குமா?
மிகப்பெரிய வெற்றி பெறும்
சென்னையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்தபின்னர் செய்தியளார்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறினார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக நிறைவேற்றியுள்ளது என்றும் கூறினார்.
போட்டியிடும் தொகுதிகள்
இந்த சட்டசபைத் தேர்தலில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்று கொண்டுள்ளதை அடுத்து இந்த தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை குறைத்து பெற்றுள்ளோம் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
போராட்டத்திற்கு வெற்றி
வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற கடந்த 40 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. எங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார்
சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறிய அன்புமணி ராமாதாஸ், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.