2016ஐ விட பெரும் சறுக்கல்.. 11.6 சதவீதம் வாக்குகளை இழக்கிறது அதிமுக.. சர்வேயில் புது தகவல்!
சென்னை: 2016 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக 11.6 சதவீதம் வாக்குகளை இழப்பதாக டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்துக் கணிப்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில் டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் 158 இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
3.8 சதவீதம் அதிகரிப்பு
அதிமுக கூட்டணிக்கு 65 இடங்கள் மட்டுமே கிடைக்கும். தமிழகத்தில் 43.2 சதவீதம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு 32.1 சதவீதம் வாக்குகளே கிடைக்கும். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும் போது திமுகவின் வாக்கு சதவீதம் 3.8 அதிகரித்துள்ளது.
43.7 சதவீதம்
அது போல் அதிமுகவின் வாக்குகளோ 11.6 சதவீதம் சரிவை சந்திப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு 232 (தஞ்சை, அரவக்குறிச்சி நீங்கலாக) தொகுதிகளில் அதிமுக கூட்டணி போட்டியிட்டது. அதில் 136 இடங்களில் வென்றது. வாக்கு சதவீதம் 43. 7 சதவீதமாக இருந்தது.
யார் பிரிப்பார்கள்
கடந்த தேர்தலைக் காட்டிலும் 11.6 சதவீதம் வாக்குகள் இழக்க போகிறது என சர்வே முடிவுகள் கூறுவதை அடுத்து அதிமுக தொண்டர்கள் களப்பணியாற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த வாக்கு சதவீதம் நிச்சயம் மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியோரால் பிரிக்கப்படும் என தெரிகிறது.
மே 2 தேர்தல் முடிவுகள்
அவ்வாறெனில் மேற்கண்ட கட்சிகளின் வாக்குச் சதவீதம் கடந்த தேர்தலை காட்டிலும் அதிகரிக்கும். என்னதான் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொன்னாலும் மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே பெரும்பாலானோர் நம்பிக்கையாகும். என்ன நடக்கிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.