"எங்ககிட்ட கேட்டீங்களா.." அதிமுகவுக்கு வானதி சீனிவாசன் 'பளிச்' கேள்வி.. கூட்டணியில் என்ன நடக்கிறது?
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில், கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அதிரடியாக தெரிவித்தார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பாஜக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அதிமுக-பாஜக இடையே முதல்வர் வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து கருத்து வேற்றுமை நீடிக்கிறது என்பதை அடுத்தடுத்து பல பேட்டிகள் உறுதி செய்தபடி இருக்கின்றன.
அகிலமின்றே அழியுமென்று இருக்கும் நிலங்கள் அஞ்சின.. உலகக்கோப்பையை வென்ற சுனாமி- உருக வைக்கும் கவிதை
எங்கள் கருத்து கேட்கவில்லை
இதோ வானதி சீனிவாசன் கூறியதை பாருங்கள்: அதிமுக கட்சி தங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்து உள்ளது. இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே இந்த கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளையும் அழைத்து ஒரு கூட்டத்தை நடத்தி அதன் வாயிலாக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொன்னால் சரியாக இருக்கும்.
முரண்பாடு இல்லையாம்
அப்படி இல்லாதவரை, நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் என்பதால், இதில் எங்கள் தலைமைதான் முடிவெடுக்கும் என்று நாங்கள் கூறத்தான் செய்வோம். நாங்கள் தொடர்ந்து கூற காரணம் இதுதான். மற்றபடி, முரண்பாடுகள் எதுவும் இல்லை. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் முருகன்
அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் சமீப காலமாகவே, திடீரென முதல்வர் வேட்பாளர் தேர்வில் பாஜகவுக்கு விருப்பம் இல்லை என்பதைப்போல அந்தக் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாஜக தலைவர் முருகன் பலமுறை திரும்பத் திரும்ப இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்.
அமைச்சர்கள் பதிலடி
அதேநேரம் அதிமுக தரப்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பலரும், அதிமுக எடுத்த முடிவுதான் இந்த கூட்டணிக்கான முடிவு என்று தெரிவித்து வருகின்றனர். செல்லூர் ராஜூ ஒருபடி மேலேபோய், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள்தான் கூட்டணியில் இருக்கவே முடியாது என்று ஒரே போடாக போட்டார்.
கூட்டணிக்குள் குழப்பம்
இருப்பினும் பாஜக விடுவதாக தெரியவில்லை. இப்போது வானதி சீனிவாசனும் இதே பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது கூட்டணிக்குள் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை என்று தெரிகிறது. ஒருபக்கம், நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக பிரச்சாரத்திற்கு தங்கள் கட்சியை அழைக்கவில்லை என்று கூறியிருந்தார். இன்னொரு கூட்டணிக் கட்சியான பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்து வருகிறது. கூட்டணிக்குள், என்னதான் நடக்கிறது என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.