அதிமுகவும், அமமுகவும்.. ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டும் சிரித்து கொண்டும்.. கவனித்தீர்களா!
அமமுக-அதிமுக பூத் ஏஜெண்ட்டுகள் ஒருவருக்கொருவர் நெருக்கம் காட்டி வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு அதிமுகவினர் மற்றும் அமமுகவினர் மத்தியில் ஒரு விதமான பாசப் பிணைப்பு உருவாக ஆரம்பித்திருப்பதாக சொல்கிறார்கள். சத்தம் போடாமல் இந்த மாற்றம் உருவாகியுள்ளதாம்.
தேர்தலில் சீட் வழங்கப்பட்டதில் அதிமுகவுக்குள் நிறைய அதிருப்திகள் எழுந்தன. எதிர்பார்க்கப்பட்டவர்களுக்கு, செல்வாக்கு மிக்கவர்களுக்கு, வெற்றி வாய்ப்பு மிக்கவர்களுக்கு அதிமுக தலைமை சீட் தரவில்லை என்றும், வாரிசு, மற்றும் உட்கட்சி பூசல் காரணமாக எதிர்பார்க்காத பலருக்கும் சீட் தந்துவிட்டது.
இதனால் தொகுதிகளில் அதிமுகவில் அதிருப்தி ஏற்பட்டு, உள்குத்து மற்றும் உள்ளடி வேலைகள் நடந்ததாகவும் சொல்லப்பட்டது. அதாவது, தொகுதிகளில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகள், அமமுகவினருக்கு மறைமுகமாகவே உதவி செய்தார்களாம்.
தாய்க்கழகம்
தாய்க்கழகத்தில் இருந்து பிரிந்தது அமமுக என்பதையும் தாண்டி, பணத்துக்காகவும் தினகரனுக்கு ஆதரவாகவே மறைமுகமாக வேலை பார்த்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. இப்போது புது விஷயம் என்னவென்றால், தேர்தல் முடிந்ததும், இந்த மறைமுக ஆதரவு என்பது வெளிப்படையாகவே மாற ஆரம்பித்திருக்கிறதாம்.
வாக்குச்சாவடிகள்
நீயும் நானும் ஒன்னு.. இதை அறியாதவன் வாயில் மண்ணு என்ற ரேஞ்சில் அதிமுகவினர், அமமுகவினர் தோள்களை உரசி பாசம் கொண்டாட ஆரம்பித்துள்ளனராம். வாக்குப் பதிவு முடிந்த அன்றே. வாக்குச் சாவடிகளில் இந்த இரு கட்சி பூத் ஏஜென்டுகள் மத்தியில் இது பகிரங்கமாகவே தெரிய ஆரம்பித்துள்ளது.
அன்புமழை
பொதுவாக பூத்தில் இருக்கும் கட்சிக்காரர்கள் எதிரும் புதிருமாகத்தான் இருப்பார்கள். சில சமயம் வெட்டுகுத்துகூட நடந்துவிடும். ஆனால் வேறு கட்சி, எதிர்கட்சி என்ற வித்தியாசம் இல்லாமல் நெருக்கமாகவே இரு கட்சியினரும் நடந்து கொள்கிறார்களாம்.. மனம் விட்டு பேசி அன்பு மழையில் நனைந்து கொண்டார்களாம். வாங்கப்பா, நாமெல்லாம் ஒன்னுக்குள் ஒன்னு.. எதுக்கு முறைச்சிக்கிட்டு என்று கை குலுக்கி பாசம் காட்டினார்களாம். பல பூத்துகளில் இதைக் காண முடிந்ததாம்.
திமுக ஷாக்
இவர்கள் இப்படி இணக்கம் காட்டியதைக் கண்டு திமுக தரப்புக்குத்தான் "கெதக்" என்று இருந்திருக்கும். மற்ற கட்சிகள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், அவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏதும் இல்லை. பாதிப்பு என்றால் அது திமுகவுக்கு மட்டுமே. இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம், ஒருவேளை தேர்தல் முடிவுகள் வந்தபிறகு இரு கட்சியும் ஒன்றாக இணைந்துவிடுமோ, அப்படி இரு கட்சியும் இணைந்துவிட்டால், திமுகவின் பலம் மேலும் குறைந்துவிடுமோ என்றெல்லாம் யோசித்து குழம்பி வருகிறதாம்!
மதுரை ஆதீனம்
இதில் பாதி உண்மை இருக்கவே செய்கிறது. உண்மையில் இந்த இரு கட்சிகளையும் இணைக்க ரகசியமாக பல வேலைகள் நடந்து வருவதாக சொல்கிறார்கள். அதைத்தான் மதுரை ஆதீனம் சமீபத்தில் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தார். சசிகலா வெளியே வருவதற்குள் அல்லது அவர் வந்த பிறகு கட்சிகள் இணையும் என்று சொல்கிறார்கள். என்னவோ நடக்குது.. மர்மமா இருக்குது.. ஒன்னுமே புரியலை.. அதிமுகவுல!