அதிமுக- தேமுதிக தொகுதி பங்கீடு இன்று இறுதியாகுமா?.. பேச்சுவார்த்தைக்கு வராத சுதீஷ், பிரேமலதா!
சென்னை: அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு சுதீஷும் பிரேமலதாவும் வராத நிலையில் தேமுதிக நிர்வாகிகள் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளனர். இன்றாவது தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொகுதி பங்கீட்டு பிரச்சினையில் அதிமுகவும் திமுகவும் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக பாமகவுக்கு 23 இடங்களை ஒதுக்கியுள்ளது.
பாஜகவுடன் இரு தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இன்னமும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் தங்களை அதிமுக அழைக்கும் என தேமுதிக எதிர்பார்த்திருந்த நிலையில் பாஜகவுடனேயே இரு தினங்களை அதிமுக செலவிட்டுவிட்டது.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தேமுதிக தனித்துப் போட்டி?. பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாகம்
இதனிடையே அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் நேற்று முன் தினம் விஜயகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 23 தொகுதிகளை தேமுதிக கேட்டதாம். இதற்கு அதிமுக மறுத்துவிட்டதாம். இந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் தங்கமணி அழைத்ததை சுதீஷ் புறக்கணித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராத என கருதிய தேமுதிக நேற்று அதிமுகவுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மென்ட்டை கொடுத்தது. தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் தனது பேஸ்புக் பதிவில் நமது முதல்வர் விஜயகாந்த் என தெரிவித்திருந்தார்.
இதனால் தேமுதிக தனித்து போட்டியிடுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவுக்கு கேபி முனுசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு தேமுதிக நிர்வாகிகள் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் வருகை தந்துள்ளனர்.
சுதீஷும், பிரேமலதாவும் வருகை தரவில்லை. பாமகவுக்கு இணையாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு தேமுதிக கோரி வரும் நிலையில் 14 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இதனால் அதிமுக- தேமுதிக இடையே தொகுதி பங்கீட்டில் சுமுக நிலை ஏற்படுமா என தெரியவில்லை.
ஒரு வேளை கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால் தேமுதிக தனித்து போட்டியிடுமா என்றும் தெரியவில்லை.
அப்போது சுமூக உடன்பாடு எட்டப்பட்டால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை சுதீஷ் சந்தித்து உடன்படிக்கையில் கையெழுத்திடுவார். இல்லாவிட்டால் தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து விலகும் என தெரிகிறது.