வேலூர் 'திக் திக்'குக்கு முடிவு.. திமுக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு.. தொண்டர்கள் அப்பாடா!
திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
சென்னை: அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரின் வேட்புமனுக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மனுக்களை ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியுள்ளது.
சோதனை, தோண்ட தோண்ட பணம், கோர்ட், கேஸ் என எல்லாம் ஒருவழியாக முடிந்து வேலூரில் மறுபடியும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 5-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதேபோல, ஏற்கனவே திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட கதிர் ஆனந்தும் களம் இறங்குகிறார்.
இது என்னடா ஏசி சண்முகத்துக்கு வந்த சோதனை.. வேட்பு மனுவை நிறுத்தி வைத்ததால் பரபரப்பு
பரிசீலனை
வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரீசிலனை இன்று தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்தது. அப்போது, ஏசி சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணையாமல், இரட்டை இலை சின்னத்தில் எப்படி போட்டியிட முடியும் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
கடிதம்
எதிர்க்கட்சியினர் இவ்வாறு கேள்வி எழுப்பியதில், அவரது வேட்புமனுவை நிறுத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதேபோல, உரிய கடிதத்தை ஏசிஎஸ் அளித்தால் மனு ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கதிர் ஆனந்த்
இதையடுத்து, திமுக சார்பில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில், அவரின் மனு பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது, பணப்பட்டுவாடா புகாரில் கதிர் ஆனந்தின் மீது புகார் இருப்பதாக சுயேட்சை ஒருவர் கூறினார். இதன் காரணமாக, வேட்பு மனு மீதான பரிசீலனையை அதிகாரி நிறுத்தி வைப்பதாக கூறினார்.
பரபரப்பு
இரு முக்கிய வேட்பாளர்களின் மனுக்களும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், கிட்டத்தட்ட 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு ஏ.சி.சண்முகம் அதிமுகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக பிரதிநிதிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேபோல், திமுக தரப்பில் வழக்கறிஞர் குழு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தது. இதையடுத்து கதிர் ஆனந்தின் மனுவும் ஏற்கப்பட்டது.
களம்
இதுபற்றி கலெக்டர் சண்முகசுந்தரம் சொல்லும்போது, ''சரியான காரணங்கள் இல்லாததால் ஏ.சி.சண்முகம் மற்றும் கதிர் ஆனந்தின் வேட்பு மனுக்கள் இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன'' என்றார். இரு தரப்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் திமுக, அதிமுக தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது போட்டிக்குள் நேரடியாக களம் இறங்கி உள்ளதால் வேலூர் தொகுதி மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.