"ஒன்னு நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்".. சைலன்ட்டா எடுக்கப்பட்ட சர்வே... செம குஷியாம்!
திமுக, அதிமுக தரப்பில் ரகசிய சர்வே ஒன்று எடுக்கப்பட்டதாம்
சென்னை: ஒரு முக்கியமான விஷயம் தமிழக அரசியலில் ஓடிக் கொண்டிருக்கிறது.. ஆனால் அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை என்றாலும் அதிமுக, திமுக தரப்பினருக்கு தெம்பை தந்து வருகிறது.
இந்த தேர்தலை பொறுத்தவரை திமுக, அதிமுக என இருவருக்குமே முக்கியமான தேர்தல்.. ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திமுகவும் கடுமையாக போராடி வருகின்றன.
இதற்கு நடுவில் சீமான், கமல், டிடிவி தினகரன் ஒருபக்கம் களமிறங்க இவர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு விடுமோ என்ற கலக்கம் இருந்துள்ளது.. அதாவது சீமான் திமுகவின் ஓட்டுக்களை பிரிப்பார் என்றும், கமல், அதிமுகவின் ஓட்டுக்களை பிரிக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது..
ஒருவேளை இவர்கள் 3 பேரும் இணைந்தால், திமுக, அதிமுக ஓட்டுக்கள் கணிசமாக பிரிந்து, கூட்டணி வாக்கு சதவீதத்தை குறைத்துவிடக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. இந்த சமயத்தில்தான், ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று பின்வாங்கி விட்டார்.. எனவே, திமுக, அதிமுகவும், தனித்தனியாக ஒரு சைலண்ட் சர்வே எடுத்து பார்த்தார்களாம். இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
ஒரு ரகசிய சர்வேயை, தங்களுக்கு ஆலோசனை தந்து கொண்டிருக்கும் 2 தனியார் நிறுவனங்களையும் வைத்து, தமிழகம் முழுக்க தனித்தனியாக எடுக்க சொல்லி உள்ளனர். அதில், ரஜினி கட்சி துவங்காதது, மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான், இருந்தாலும், பொதுமக்கள், தங்கள் ஓட்டுக்களை மெகா கட்சிகளான திமுக, அதிமுகவுக்குதான் அளிக்ககூடும், இதில் ஒரு கட்சியைதான் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும், பிற கட்சிகளுக்கு ரஜினியின் அந்த வாக்குகள் செல்லாது என்றும் தெரியவந்துள்ளது.
நேர்ல வேணாம்..'வீடியோ’ கான்பிரன்சிங் ஓகே.. தூத்துக்குடியில் 'மனு’ கொடுத்த ரஜினி வக்கீல்!
இப்படி ஒரு ரிசல்ட்டை கேள்விப்பட்டதும் இரு திராவிட கட்சி தலைமைகளும் செம குஷியாகி விட்டதாம். ஆக, ஒன்னு நீ இருக்கணும், இல்லாட்டி நான் இருக்கணும், வேற யாரும் 3வதாக வந்துவிடக்கூடாது என்பதே இந்த சைலண்ட் சர்வேயின் சூட்சுமம் போலும்!