வேல்முருகனை வைத்து செம "ஸ்கெட்ச்" போடும் திமுக.. அதிமுகவுடன் இறங்கி போவாரா ராமதாஸ்?
பாமக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை மறைமுகமாக தொடங்கி உள்ளது
சென்னை: வன்னியர்களின் வாக்குகளை அள்ள திமுகவும், அதிமுகவும் பலே அதிரடிகளை கையில் எடுத்து வருகின்றன.
கடந்த எம்பி தேர்தலில் திமுகவை முந்திக் கொண்டு பாமகவுடன் கூட்டணி வைத்தது அதிமுக.. இந்த முறை திமுக பாமகவை உள்ளே கொண்டு வர முயற்சிப்பதாக சொல்லப்பட்டது.. ஆனால், திருமாவளவன் கூட்டணியில் இருக்கும்வரை, அங்கே சேருவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
எனினும், இந்த முறை கூட்டணி உறுதி செய்ய 2 அமைச்சர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தியும் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
ராமதாஸ்
அத்துடன் ராமதாஸ் போட்ட கண்டிஷன்களை கேட்டு அப்படியே யூடர்ன் அடித்து திரும்பி வந்துவிட்டனர். இதற்கு பிறகு பாமக நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் எப்படியும் ஒரு முடிவை பாமக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கண்கலங்கி உருக்கமாக டாக்டர் ராமதாஸ் பேசியதைதவிர, வேறு ஒன்றும் கூட்டணி சம்பந்தமாக எடுக்கவில்லை போல் தெரிகிறது.
பாமக
அதற்கேற்றபடி அதிமுகவும் பாமகவை நெருங்காமலும், தொடர்ந்து கூட்டணி குறித்தும் பேசாமலும் இருந்து வந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் பாமக அதிமுகவுடன் மறுபடியும் மறைமுகமான பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது... நேற்று பாமக பிரதிநிதிகள் ஜிகே மணியும், ஏகே மூர்த்தியும் தமிழக முதல்வரையும் துணை முதல்வரையும் சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியானது.
அதிமுக
திமுகவுடன் கூட்டணி வைக்க முடியாத சூழலில், தனியாக நின்று களத்தை சந்திக்க முடியாத சூழலில், அதிமுகவுடன்தான் கூட்டணி சேர வேண்டும் என்ற நிலையில், பாமக இறங்கிவந்திருப்பதாகவே தெரிகிறது.. இருந்தாலும் டாக்டரே நேரில் போகாமல், ஜிகே மணியையும், ஏகே மூர்த்தியையும் சந்திக்க அனுப்பி வைத்திருக்கிறார்.. இவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.
தேர்தல் செலவு
ஆனால், இந்த சந்திப்பு வன்னியர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக என்று காரணம் கூறப்பட்டாலும், தனிப்பட்ட விஷயங்களுக்காகத்தான் சந்திப்பு நடந்திருக்கிறது என்று பல அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்... கணிசமான தொகுதிகள், தேர்தல் செலவுக்கு பணம் போன்றவை குறித்தும் பேச்சு நடந்திருக்கலாம் என்கிறார்கள்
வன்னியர்கள்
அதேசமயம், அந்த 20 சதவீத இடஒதுக்கீடு விஷயத்தில் பாமக இன்னமும் கறாராகத்தான் உள்ளது.. தொகுதி எண்ணிக்கையை இறுதிசெய்துவிட்டு, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் வாக்குறுதி தந்தால், இந்த கூட்டணி பேச்சுவார்த்தையை பாமக பகிரங்கமாக அறிவிக்கும் என்கிறார்கள்.. ஆனால், இந்த வாக்குறுதியை அதிமுக தரப்பு அவ்வளவு சீக்கிரம் தந்துவிடுமா? தேர்தலுக்குள் மசோதா சாத்தியமா என்று தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் பாமகவின் தயவும் அதிமுகவுக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது.
வேல்முருகன்
திமுக தனது கட்சி வன்னியர் வாக்குகளை நிலை நிறுத்திக் கொள்ள கட்சிக்குள் எத்தனையோ அதிரடி மாற்றங்களை செய்துள்ளது... எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக வாழ்வுரிமை வேல்முருகன் கூட்டணிக்குள் இருக்கிறார்.. இவரைதவிர, காடுவெட்டி குரு மகன் கனலரசனையும் தங்கள் வசம் திமுக வைத்திருக்கிறது... இதெல்லாம் தெரிந்துதான் அதிமுகவும் பாமகவை தாராளமாக அணுக வேண்டி உள்ளது.. பார்ப்போம்.. வன்னியர் ஓட்டுக்களை லட்டுபோல அள்ள இருப்பது திமுகவா? அதிமுகவா? என்று!