பேரணிக்கு வாங்க.. அழைத்த பாஜக.. வராமல் நிராகரித்து.. ஷாக் கொடுத்த அதிமுக, பாமக!
பாஜகவின் சென்னை பேரணியில் அதிமுக, பாமக பங்கேற்கவில்லை
சென்னை: யார், எங்கே, என்ன பேரணி நடத்தினாலும் சரி.. மக்களுக்கு எதிரானது என்றால் பாமக, அதிமுக ஒதுங்கியேதான் இருக்கும் என்பது இன்று பாஜக நடத்திய சென்னை பேரணியில் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.. தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால், அந்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜக பேரணிகளை, பிரச்சாரங்களை நடத்த முடிவு செய்து களம் இறங்கி உள்ளது.. இந்த குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த 10 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கட்சி தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவே துவக்கி வைத்தார். அவரே டெல்லியில் வீடு வீடாகப் போய் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக சென்னையில் பாஜக பேரணி.. புறக்கணித்த அதிமுக, பாமக
சென்னை பேரணி
இதையடுத்து நாடு முழுவதும் பாஜகவினர் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகின்றனர். சென்னையிலும் இந்த பேரணி இன்று நடந்தது. ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்துகொண்டனர்.. இதில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டணியில் உள்ள அதிமுகவும், பாமகவும் கலந்து கொள்ளாமல் ஷாக் கொடுத்துள்ளனர்.
ராமதாஸ் கருத்து
பாமகவை பொறுத்தவரை குடியுரிமை திருத்த சட்டத்தை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளவில்லை.. ஆனால் ராஜ்யசபாவில் சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தனர். இது சம்பந்தமாக அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொல்லும்போது, "கூட்டணி தர்மத்தை மதித்து ஆக வேண்டும். அதேசமயம், பாமகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலை. நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்தது ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு இல்லை" என்றார்.
சீமான் அதிர்ச்சி
டாக்டர் இப்படி சொன்னதுமே பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.. கூட்டணியில் இருந்தால் ஆதரிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினர்.. "ஐயா ராமதாஸ் இப்படி பேசுவார் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.. ஐயாவா இப்படி பேசியது, என்னால நம்பவே முடியல" என்று சீமானும் தனது அதிருப்தியை வள்ளுவர்கோட்ட போராட்டத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
குடியுரிமை
ஆனால் இதனை அடுத்த சில தினங்களிலேயே அன்புமணி ராமதாஸ் தெளிவுபடுத்தினார்.. "குடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கையும் சேர்க்க வேண்டும். இலங்கையில் 30 வருஷமாக தமிழர்களுக்கு பிரச்சனை இருந்து வருகிறது. தற்போது உள்ள பிரதமர், ஜனாதிபதி எல்லோரும் போர்க்குற்றவாளிகள்... பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது... இதனுடன் இலங்கையையும் சேர்க்கவேண்டும். ஏற்கனவே அகதி முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை தர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்றார்.
காரணங்கள்
இப்படிப்பட்ட சூழலில் இன்று நடந்த பாஜக பேரணிக்கு கல்தா கொடுத்து ஷாக் அளித்துள்ளன அதிமுகவும், பாமகவும். இதற்கு சில காரணங்கள் உள்ளன. அடுத்தடுத்து சந்தித்த தேர்தல் தோல்விகள் இதில் முக்கிய காரணம். பாஜக கொண்டு வந்த முத்தலாக் சட்டம் ஆகட்டும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகட்டும்.. எல்லாமே அதிமுகவைத்தான் அதிகம் பதம் பார்த்தன. காரணம் பாஜகவை ஆதரிக்கப் போய் ஒட்டுமொத்த முஸ்லீம்களின் எதிர்ப்பையும் அதிமுக சம்பாதித்து வைத்துள்ளது.
படுதோல்வி
எப்போது இந்த சட்டத்தை பாஜக கொண்டு வந்ததோ, அது முதலே அதிமுக, பாமக சற்று ஒதுங்கியே உள்ளன. மக்கள் மத்தியில் பாஜக மீது கடும் அதிருப்தி நிலவுவதாலும், முஸ்லீம் ஓட்டு வங்கி முழுமையாக கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாலும் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் போதாதென்று, உள்ளாட்சித் தேர்லில் தோற்றதும் அதிமுகவை அதிர வைத்துள்ளது. இது வரலாறு காணாத தோல்வி. . அன்வர் ராஜா இன்றுவரை இந்த காரணத்தைதான் சொல்லி கொண்டு இருக்கிறார்.. என்னதான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று அன்வர் ராஜாவை அதிமுக கூறினாலும் கூட அதுதான் உண்மை நிலவரமும்கூட.. அதனால்தான் பாமக, அதிமுகவும் அதிர்ந்து போனதுடன், ஒதுங்கியே போய்விட்டது என்று சொல்லலாம்.
மக்களுக்கு மெசேஜ்
கூட்டணி தர்மத்துக்காக பாஜகவின் பேரணியில் பங்கேற்றால் அது கட்சிக்கும், ஆட்சிக்கும் மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதிமுக நிச்சயம் நினைத்திருக்கலாம்.. அதேபோலதான் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்று டாக்டர் ராமதாசும் உணர்ந்திருக்கலாம். இதன் காரணமாகவே இரு கட்சிகளும் பாஜக பேரணியை முற்றாக புறக்கணித்து ஓரம் கட்டி விட்டன என்று எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த புறக்கணிப்பின் மூலம், "நாங்கள் பாஜக இழுத்த இழுப்புக்கெல்லாம் போவதில்லை... மக்களையும் மனதில் கொண்டுள்ளோம்" என்றும் மக்களுக்கு மெசேஜ் கொடுக்க முயன்றுள்ளன அதிமுகவும் பாமகவும்!!