சூலூர், அரவக்குறிச்சி உட்பட 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: அரவக்குறிச்சி உட்பட 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது.
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் 10 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அதேபோல அமமுகவும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது.
அதிமுகவும், அமமுகவும்.. ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டும் சிரித்து கொண்டும்.. கவனித்தீர்களா!
ஆனால், அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதிக்கு பெ.மோகன், சூலூர் தொகுதிக்கு வி.பி.கந்தசாமி, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எஸ்.முனியாண்டி, அரவக்குறிச்சி தொகுதிக்கு செந்தில்நாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
செந்தில்நாதனை பொறுத்தளவில், கரூர் மாவட்ட, இளைஞர் பாசறை, மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராக உள்ளார். முனியாண்டி, அவனியாபுரம் பகுதிக் கழக செயலாளராக உள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமானவர் மோகன். இதேபோல, கோவை புறநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை தலைவராக பதவி வகிப்பவர்தான் கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு பிறகு தேர்தல் அலுவல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று, வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை இடைத்தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வெல்ல வேண்டும். அப்படி வென்றால்தான், ஆட்சி தொடர முடியும் என்ற கட்டாய சூழ்நிலை உள்ளதால் இந்த தேர்தல் அதிமுகவுக்கு, அக்னி பரிட்சையாக பார்க்கப்படுகிறது.