"கிளைமேக்ஸ்.." ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு? அதிமுக - பாஜக நாளை பேச்சுவார்த்தை
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக இடையிலான பேச்சுவார்த்தை நாளை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை 4 மணியளவில் கமலாலயத்தில் நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் அதிமுக நிர்வாகிகள் பாஜக தலைவர்களை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு மூலம் தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவேரா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் பின்னர் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவன், மகன் சஞ்சய் சம்பத்- யார் காங். வேட்பாளர்?
அதிமுக போட்டி
திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
பாஜக செயற்குழு கூட்டம்
ஏனென்றால் அதிமுக கூட்டணியில் இருந்தாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. இதனால் இடைத்தேர்தலிலும் பாஜக தனித்து போட்டியிடும் சூழல் வர வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜக செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்று வருகிறது. அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதிமுக - பாஜக சந்திப்பு
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக நிர்வாகிகள் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை 4 மணியளவில் கமலாலயத்தில் பாஜக தலைவர்களை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனால் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? அல்லது அதிமுகவுக்கு ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூட்டணி தர்மம
முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்காக 14 பேர் கொண்டு குழுவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதேபோல் இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலை கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி கட்சியின் மூத்த தலைவர்களிடம் கருத்தை தெரிவிப்பேன். கூட்டணி தர்மம், நியாயம் என்று இருக்கின்றது. குறுகிய கால செயல்பாட்டுக்காக அதை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.