அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 22 தொகுதிகள் ஒதுக்கீடு? பேச்சுவார்த்தை குறித்து பரபரப்பு தகவல்
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர், துணை முதல்வரை தனித்தனியே சந்தித்து பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது வேட்பு மனு தாக்கல் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் அதிமுக மற்றும் திமுக இரண்டு அணியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திமுக காங்கிரஸ் இடையே முதல் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
கூட்டணி கட்சிகள்
திமுக இந்தமுறை 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என்று விரும்புவதாக தெரிகிறது. இதனால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளன. ஏனெனில் கூட்டணி கட்சிகளுக்கு இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக விரும்புகிறது
அதிக தொகுதிகள்
அதிமுக கூட்டணியில் சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வந்தது. அதிமுகவிடம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது, குறிப்பாக கொங்கு மண்டலத்திலும் கன்னியாகுமரியிலும் அதிக தொகுதிகளை கேட்டுவருவதாக சொல்லப்படுகிறது.
காலையில் நடந்தது
இந்நிலையில் தேர்தல் அறிவக்கப்பட்ட நிலையில அதிமுக-பாஜக இடையே இன்று காலை 8.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, சி.டி.ரவி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
எந்தெந்த தொகுதிகள்
முதல்வர் எடப்பாடியை தொடர்ந்து. அதன் பிறகு அவர்கள் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிமுக பாஜகவிற்கு 22 தொகுதிகளை ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வமாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. எந்ததெந்த தொகுதிகளை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கி உள்ளது என்பது விரைவில் தெரியவரும்.