சீரியசாகவே திண்டுக்கல் சீனிவாசனை முதல்வர் வேட்பாளராக்கலாமே...ஒரு தொண்டர் சொல்லும் அடேங்கப்பா காரணம்!
சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருக்கிறது. இந்த நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் என்ன? என ஒருகுரல் திண்டுக்கல் மண்ணில் இருந்து கிளம்பியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம்; அதனால் அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்பது அதிமுகவினரின் பொதுவான கருத்து. ஆனால் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமோ தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளார்.
சசிகலா காலில் விழுந்து சரணடைபவர்களே முதல்வர் வேட்பாளர் - திண்டுக்கல் லியோனி கிண்டல்
முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிப்பு
ஓபிஎஸ்-ன் கோரிக்கைக்கு அதிமுகவில் ஆதரவு குறைவாக உள்ளது. அதேநேரத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியையாவது இந்த போக்கில் போயாவது கைப்பற்ற வேண்டும் என்பதும் ஓபிஎஸ்-ன் திட்டம். அதிமுகவின் இந்த உச்சகட்ட மோதலுக்கு முடிவாக முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
திண்டுக்கல் சீனிவாசனை
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் வித்தியாசமான கருத்தை முன்வைத்திருக்கிறார். அதாவது எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கிய போது அவர் திண்டுக்கல் இடைத்தேர்தலைத்தான் சந்தித்தார். அப்போது திண்டுக்கல் மண்தான் எம்ஜிஆருக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்தது. ஆகையால் எம்ஜிஆரின் தொண்டர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட சீனியரான அமைச்சர் சீனிவாசனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை.
சர்ச்சைகளின் நாயகன்
அதிமுக ஆட்சியில் வாயை திறந்தாலே சர்ச்சைக்கு பெயர் போனவர் அமைச்சர் சீனிவாசன். அண்மையில் கூட, எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதல்வர் என கூறியிருந்தார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து யாரும் பேசக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை மீறி சீனிவாசன் பேசியது சர்ச்சையானது. இதனால் ஆமாம் நான் கட்டுப்பாட்டை மீறி பேசிவிட்டேன் என்றும் சொல்லியிருந்தார் சீனிவாசன்.
இப்படியும் ஒரு கோணம்
இப்படியான சூழ்நிலையில் எம்ஜிஆரின் அரசியல் வெற்றிக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்த திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவரை முதல்வர் வேட்பாளராக்கலாம் என கோரிக்கை எழுந்திருக்கிறது. திண்டுக்கல் சீனிவாசன் முதல்வர் வேட்பாளராவதற்கு உரியவரா? இல்லையா? என்ற விவாதங்களுக்கு அப்பால் நல்ல கோணத்தில் உருவாகியிருக்கிறது இந்த சிந்தனை என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் இது திண்டுக்கல் சீனிவாசன் கூட நினைத்துப் பார்க்காத ஒன்றுதான்.