சென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்
சென்னை: சென்னை மெரீனாவில் ஜெயலலிதாவின் நினைவகம் திறப்புக்கு வந்து குவிந்த அதிமுக தொண்டர்கள் அப்படியே டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்தனர். இதனால் சென்னை டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் பெருமளவு அலைமோதியது.
சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்தும் பேருந்துகள், ரயில்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அழைத்துவரப்பட்டனர். இதனால் சென்னை மெரினா கடற்கரை அதிமுக தொண்டர்களால் நிறைந்து காணப்பட்டது.
இந்நிகழ்ச்சி நிறைவடைந்த உடனேயே அதிமுக தொண்டர்கள் அப்படியே அருகே இருந்த டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்தனர். ஒரேநேரத்தில் ஒவ்வொரு கடையையும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் முற்றுகையிட்டதால் கடுமையான நெரிசல், சச்சரவுகள் ஏற்பட்டன.