தேர்தலை சந்திக்க.. அதி ஜரூராக ரெடியாகும் அதிமுக.. விருப்ப மனு வாங்கும் தேதி மாற்றியமைப்பு
சென்னை: அதிமுக விருப்ப மனு வழங்க மார்ச் 3ம் தேதிதான் கடைசி நாள் என்று, அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 15ம் தேதி அதிமுக தலைமைக் கழகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி 24.2.2011 முதல் 5.3.2021 வரை விருப்ப மனு பெறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேரத்தை விரையம் செய்ய அதிமுக தயாராக இல்லை. எனவே இப்போது தேதியை மாற்றிவிட்டது.
அறிக்கை விவரம்
பிப்ரவரி 15ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 24.2.2021 புதன்கிழமை முதல் 5.2.2021 வெள்ளிக் கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் உரிய கட்டணங்களை செலுத்தி படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கட்டணம் விவரம்
தமிழ்நாடு - 15,000/-, புதுச்சேரி - 5.000/-, கேரளா - 2.000 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிமுக செய்திக்குறிப்பு தெரிவித்தது. அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
ஏப்ரல் 6ம் தேதி தேர்தல்
ஆனால், கடந்த, வெள்ளிக்கிழமை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்பது அறிவிப்பு. புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் அதே நாளில்தான் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.
அதிவேக அதிமுக
இவ்வளவு வேகமாக தேர்தல் நடைபெறப்போகிறது என்பதை அதிமுக தலைமை எதிர்பார்க்கவில்லை. எனவே, விருப்ப மனுக்கான கடைசி தேதியை 2 நாட்கள் கட் செய்துள்ளது. போதிய கால அவகாசம் இல்லாததால் 3 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலை சந்திக்க அதிமுக துரிதம் காட்டி வருவதை இந்த நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன.