இதுதான் அதிமுக.. கூட்டணிக்கு கொடுத்த "ஸ்ட்ராங் சிக்னல்.." வியந்து பார்க்கும் பாஜக, தேமுதிக!
சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு சட்டசபை தொகுதி எண்ணிக்கை இன்னும் உறுதியாகாத நிலையில் அதிரடியாக 6 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அதிமுக தலைமை.
பாஜகவுடன் எட்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. அமித்ஷாவே நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகும்கூட தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை.
பாஜக-அதிமுக இடையே நான்கு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. தேமுதிகவுடன் உடன்பாடு ஏற்படவில்லை. பாமகவுடன் மட்டுமே 23 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதிரடி அறிவிப்பு
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், ஜெயக்குமார், சண்முகம், ஷண்முகநாதன், தேன்மொழி ஆகியோர் போட்டியிட உள்ள தொகுதிகள் பெயரை, அதிமுக இன்று அதிரடியாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை கூட்டணி கட்சிகளுக்கான சமிக்ஞையாக பார்க்க வேண்டியுள்ளது. குறிப்பாக தேமுதிகவின் மூத்த தலைவர் சுதீஷ், அதிமுக கூட்டணியை 2011ல் நாம் ஆதரிக்காவிட்டால் அதிமுக ஆட்சிக்கு வந்து இருக்காது என்ற கருத்துக்களை குறிப்பிட்டார்.
ஒரே நாளில் நேர் காணல்
இப்போதும் கூட நாங்கள் கூட்டணிக்காக அவர்கள் பின்னால் நிற்கவில்லை. அவர்கள் தான் வருகிறார்கள். இப்படியெல்லாம் சுதீஷ் பேசிய நிலையில்தான், இன்றைக்கு நேரடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அடுத்தகட்ட நகர்வுக்கு அதிமுக சென்றுவிட்டது. நேற்று ஒரே நாளில் அனைத்து 234 தொகுதிகளுக்குமான நேர்காணலை முடித்தார்கள். இன்று வேட்பாளர் பட்டியலில் விஐபிகளுக்கான தொகுதிகளை வெளியிட்டார்.
ரயில் புறப்பட்டு விட்டது
இதன் மூலம் அதிமுக அடுத்தடுத்த கட்டத்துக்கு நோக்கி செல்ல தயாராக இருக்கிறோம். நீங்களும் தொகுதி பங்கீட்டை சீக்கிரம் முடியுங்கள் என்ற சமிக்ஞை கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்னதாக அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா இல்லையா என்று கேள்வி எழுப்பியபோது, "ரயில் புறப்பட்டு விட்டது.. எங்களுடன் வந்து பயணிப்போர், பயணிக்கலாம். ரயில் இன்ஜினை முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி இயக்கி வருகிறார்" என்றார்.
நல்ல நேரம்
பாஜகவிடமிருந்து சில முக்கிய தொகுதிகளை, தங்களுக்கு ஒதுக்க கேட்பதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு அவகாசம் தராமல் வேகமாக பட்டியலை வெளியிட்டுள்ளது அதிமுக. மேலும், இன்று நல்ல நாள் என்பதாலும் முதல்கட்ட பட்டியலை வெளியிட்டிருப்பார்கள். பிற பட்டியலை வெளியிட தாமதமாகக் கூடும் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன. எது உண்மையோ.. அதிமுக அடுத்த கியருக்கு போய்விட்டது என்பது மட்டும் நிதர்சனம்.