முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அவசரம் காட்டுகிறதா அதிமுக.. திடீரென இந்த குழப்பம் ஏன்?
சென்னை: அதிமுக ஆட்சி முடிய இன்னும் 7 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், திடீரென முதல்வர் வேட்பாளர் விவாகரத்தில் அவசரம் காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதிமுகவில் அதிகாரப்போட்டியை உருவாக்கவும், யார் பெரியவர் என்பதை காட்ட உதவுமே தவிர, இதனால் அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். இதேபோல் ஆட்சியில் முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள்.
அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது இருந்தாலும் இரட்டை தலைமையின் படி இப்போது வரை சுமூகமாக போய்கொண்டிருக்கிறது. ஆனால் முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு பின்னர் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக குழப்பங்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டரில் அதிரடி பதில்.. ஏற்கப்பட்டதா கோரிக்கை?
முதல்வர் வேட்பளார்
அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது என்பதில் தான் அதிமுகவில் திடீரென பிரச்சனை உருவாகி உள்ளது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், இந்த முறை மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மத்தித்தேன். அடுத்த முறை தன்னை நிறுத்த வேண்டும் என்று கோரினார். அம்மாவே தன்னை முதல்வராக்கியதாக கூறினார்.
எடப்பாடி தலைமை
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போது ஆட்சியில் உள்ள தன்னையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார். சிறப்பாக ஆட்சியை நடத்தி வரும் தன்னை பிரதமர் மோடியே பாராட்டி உள்ளார். எனவே எனது தலைமையில் தேர்தலை சந்திப்பதில் என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் தன்னை மாற்றினால் திமுக சொல்வதை ஏற்பது போல் ஆகிவிடும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் நம் இருவரையும் சசிகலா தான் முதல்வராக ஆக்கினார் என்று கூறியிருந்தார். இப்படியாக விவாதங்கள் நீண்ட நிலையில் முதல்வர் வேட்பாளரை அக்டோபர் 7ம் தேதி ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து அறிவிப்பார்கள் என்று கூறி மூத்த நிர்வாகிகள் ஐந்தரை மணி நேர விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
எடப்பாடிக்கு அதிக ஆதரவு
இந்நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக பலரும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. இதை சில அமைச்சர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டனர். அதுவும் தெரிவித்த அமைச்சர்கள் என்று பார்த்தால் தென்மாவட்ட அமைச்சர்கள் தான். ஏற்கனவே கொங்கு மண்டல அமைச்சர்கள் எல்லோரும் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளதால் கிட்டதட்ட பலரது ஆதரவு எடப்பாடிக்கே நேரடியாக கிடைத்துள்ளது. ஆனால் இதுவரை மூத்த நிர்வாகிகளோ அல்லது அமைச்சர்களோ ஒ பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
திடீர் அவசரம் ஏன்
இதனிடையே முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வம் என்ன மாதிரியான முடிவை எடுப்பார் என்று அதிமுகவில் பரபரப்பு நிலவுகிறது. இருவரும் ஒற்றுமையாக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அதிமுகவின் தலையெழுத்தாக பார்க்கப்படும் இந்த முடிவு விவகாரத்தில் திடீரென எழுத்த அவசரம் பல கேள்விகளை எழுப்புகிறது.
ஏழு மாதம் இருக்கிறது
அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை உடனே அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றே முதல் கேள்வி எழுகிறது. ஆட்சி முடிய கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் முழுமையாக உள்ள நிலையில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அவசரம் காட்டுவது அதிமுகவுக்கு நல்லதல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
சசிகலா விடுதலை
சசிகலா வெளியே வரப்போவது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்த பிறகே முதல்வர் வேட்பாளர் சர்ச்சை எழுந்ததா என்ற கேள்விகளும் எழுகிறது. சசிகலா சிறையில் இருந்து வருவதற்குள் இந்த விவகாரத்தில ஒரு தீர்க்கமான முடிவெடுத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அதிமுக தலைமை விரும்பியதாக என்ற கேள்விகளும் எழுவதாக அரசியல் விமர்சகங்கள் கூறினர்.
அதிகாரமிக்கவர் யார்
அனைவரும் இணைந்து உழைத்து தேர்தல் முடிந்த பின்னர் ஒற்றுமையாக தேர்வு செய்ய வேண்டிய முதல்வர் வேட்பாளரை, இப்போதே ஆலோசிப்பதால் அதிமுகவில் என்ன மாதிரியான நன்மை தரும் என்பது தெரியாது. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஒரு தரப்பு விட்டுக்கொடுத்து செல்ல மறுத்தால் தேர்தல் நேரத்தில் அது சிக்கலையே ஏற்படுத்தும். எனவே அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை என்பது யார் அதிகாரமிக்கவர் என தெரிந்து கொள்ள மட்டுமே உதவும். இதுஅதிமுகவுக்கு இப்போதைய சூழலில் நல்லதல்ல என்கிறார்கள் அதிமுக அனுதாபிகள்.