அதிமுக முதல்வர் வேட்பாளர்: புலியாட்டம்... குத்தாட்டம் - திருவிழா கோலமான ராயபேட்டை
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு இன்று வெளியான நிலையில் புலியாட்டம், குத்தாட்டம் என களைகட்டியது அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதி முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளது. புலியாட்டம், குத்தாட்டம் என தொண்டர்கள் மகிழ்ச்சியாக நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு குவிந்திருந்த தொண்டர்கள் நிரந்தர முதல்வரே மக்கள் முதல்வரே என்ற கோஷங்களை எழுப்பி எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வத்தை உற்சாகமாக வரவேற்றனர். ட்ரம்ஸ் முழங்க புலியாட்டம் ஆடினர் தொண்டர்கள்.
அதிமுகவின் வரலாற்றில் இன்று முக்கியமான நாளாக கொண்டாடி வருகின்றனர் அதிமுகவினர். காரணம் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்று கடந்த சில மாதங்களாக நீடித்த சர்ச்சைக்கு இன்று பதில் கிடைத்தது.
முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சந்திக்கிறது அதிமுக. இந்த முக்கிய அறிவிப்பினை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
அதிமுக முதல்வர் வேட்பாளரானார் எடப்பாடி பழனிசாமி... சாதனைகளை முன்வைத்து போராடி சாதித்தார்!
ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டபடி அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கேடி தங்கமணி, எஸ்.பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன்,ஜெயக்குமார்,சிவி சண்முகம், அமைச்சர் காமராஜ், சோழவந்தான் மாணிக்கம்,ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், ப.மோகன்,கோபாலகிருஷ்ணன் என 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களும் அமைக்கப்பட்டுள்ளதால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.