மீண்டும் மீண்டும் சந்திப்பு...உடையுமா முதல்வர் க்ளைமேக்ஸ்... இவர்கள்தான் இந்தப் பட்டியலில்!!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் இரண்டாவது கட்டமாக இன்று மாலை ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது இல்லத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் வந்துள்ளனர்.
இவர்கள் வருகைக்கு முன்னதாக அமைச்சர்கள் காமராஜ், சிவி சண்முகம், கே.பி அன்பழகன் ஆகியோரும் முதல்வர் இல்லத்திற்கு வந்தனர்.
வரும் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கிளைமேக்ஸ் நாளை உடைய இருக்கிறது. இந்த நிலையில்தான் இன்று காலை முதல் முதல்வர் மற்றும் துணை முதல்வரை முக்கிய மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.
இன்று காலை, துணை முதல்வர் பன்னீர் செல்வத்துடன் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு இருந்தனர். 2.30 மணி நேரம் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்று இருந்தது. இதையடுத்து இவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு இருந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு இருந்தனர். இதையடுத்தே தற்போது முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் நிரந்தர முதல்வர், அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர்.. ஓபிஎஸ் வீடு முன்பு 13 பேர் முழக்கம்
அதிமுக வழிகாட்டு குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்களாக கருதப்படும் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கடம்பூர் ராஜூ, தளவாய் சுந்தரம், ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன், செம்மலை ஆகியோரும் ஓ.பன்னீர் ஆதரவாளர்கள் பட்டியலில் ஆர்.பி. உதயகுமார், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் குழுவில் 11 பேர் மட்டுமே இடம் பெற முடியும் என்பதால் இவர்களில் சிலருக்கு வாய்ப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தம்பிதுரை, சி.வி. சண்முகம், பட்டியலினத்தவர் சார்பில் அமைச்சர் ராஜலட்சுமி, ராஜ்யசபா எம்பி சந்திரசேகர் ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது.